கொளத்தூரில் வாழ்த்து முழக்கங்களுக்கு கிடையே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்ட நிலையில், கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் எளிதில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த 2011, 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் கொளத்தூரில் தொடர்ந்து வெற்றி பெற்ற ஸ்டாலின், இந்த முறையும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாக திமுகவினர் நம்பியிருந்தனர். ஆனால் வாக்கு எண்ணிக்கையில் முடிவுகள் தலைகீழாக மாறின.
தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு, மு.க. ஸ்டாலினை 9,121 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ஸ்டாலின் 72,988 வாக்குகளைப் பெற்ற நிலையில், அவரை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு 82,109 வாக்குகளை பெற்றார்.
இந்நிலையில், திமுக தலைவைர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில், “திராவிட முன்னேற்றக் கழகம் ஆறு முறை ஆட்சியில் இருந்துள்ளது. நாம் பார்க்காத வெற்றியும் இல்லை, நாம் சந்திக்காத தோல்வியும் இல்லை. அரசியல் பொதுவெளியில் கொள்கையைக் காக்கும் பயணத்தில் நமது கொள்கை தோல்வி அடைந்துவிடக் கூடாது என்பதில் நாம் எப்போதும் கவனமாக இருப்போம். மக்களுக்கு நேரடியாகச் சென்று நன்றி தெரிவிக்கும் கடமையை நாம் எப்போதும் செய்து வருகிறோம். அந்த வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும் உடனடியாக வாக்களித்த மக்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
இன்று மாலை முதல் ஆளாக கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். அப்போது திமுக தொண்டர்கள் கண்ணீர் மல்க “வாழ்க வாழ்க” என வாழ்த்து முழக்கங்களை எழுப்பினர். ஸ்டாலின் அருகில் இருந்த சேகர் பாபு கண்கலங்கியபடி நின்றிருந்தார். மேலும் ஸ்டாலின் வெற்றி வாய்ப்பை இழந்த நிலையில் திமுக தொண்டர்கள் பலரும் கண் கலங்கினர். அவர்களை பார்த்து அழாதீர்கள் என ஸ்டாலின் சைகை மூலம் ஆறுதல் தெரிவித்தார். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கண்ணீர் மல்க ஸ்டாலின் வாகனத்தை பின்தொடர்ந்து செல்வது அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
