நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளது. எனினும் பெரும்பான்மை கிடைக்காததால் இதர கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்தநிலையில், லால்குடியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மார்டின் மனைவி லீமா ரோஸ் சென்னையில் இன்று இரவு செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், “தவெகவுக்கும் எடப்பாடி அண்ணனுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. அது நல்லபடியாக முடியும் என்று நினைக்கிறேன். கண்டிப்பாக அதிமுக ஆட்சி அமையும்” என்றார்.
எந்த மாதிரியான பேச்சுவார்த்தை என்ற கேள்விக்கு, “அது தலைவருக்குத்தான் தெரியும். சிஎம் லெவலில் பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறது. தலைவர் எடப்பாடியும், தவெக தலைவர் விஜயும் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். பேச்சுவார்த்தை சுமுகமாகப் போய்க்கொண்டிருக்கிறது. விரைவில் தலைமை இது குறித்து அறிவிக்கும்.” என்றார்.
அதேசமயம் இன்று இரவு எடப்பாடி பழனிசாமியை சந்தித்துவிட்டு புறப்பட்ட முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், “தவெக ஆட்சி அமைக்க அதிமுக ஆதரவு அளிக்காது” என்று கூறினார்.
இரண்டு பேரும் பேசியது முரண்பாடாக உள்ளதால், அதிமுக ஆதரவு தெரிவிக்குமா? இல்லையா?என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
