ஜனநாயக குரல்களை நெரிக்கும் விஜய் அரசே!- சிபிஎம் பெ.சண்முகம் விளாசல்!

Published On:

| By Mathi

CPM Shanmugam Vijay

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் போலீசார், கல்லூரிகளுக்குள் புகுந்து மாணவர்களை கைது செய்வதற்கு தவெக ஆட்சிக்கு ஆதரவு தரும் சிபிஎம் (CPM) கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கை: ஒன்றிய பா.ஜ.க அரசு அமலாக்கி வரும் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும். நீட் தேர்வு வினாத்தாள் கசிவிற்கு காரணமான ஒன்றிய அரசின் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். தேசிய தேர்வு முகமை மூலம் தேர்வுகள் கூடாது, நீட் தேர்வில் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 1 கோடி நிவாரணம் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து தலைநகர் டெல்லியில் அறவழி போராட்டம் நடந்து வருகிறது.

ADVERTISEMENT

சோனம் வாங்சுக் கைது, அதைத் தொடர்ந்து மாணவர்கள் ஊர்வலம் நடத்த முயன்றனர். அவர்கள் மீது காட்டுமிராண்டித் தனமாக காவல்துறை தடியடி தாக்குதல் நடத்தியது. நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மாணவிகள் மீது மிகவும் கீழ்த்தரமான அணுகுமுறையை காவல்துறையினரும், துணை நிலை ராணுவ வீரர்களும் கையாண்டுள்ளனர். அனைத்தும் வீடியோக்களாக வெளிவந்துள்ளன.

நெஞ்சம் பதை பதைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசின் மிக மோசமான இந்த அடக்குமுறையை கண்டித்து இந்தியா முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. தமிழ்நாடும் இதற்கு விதிவிலக்கு அல்ல. நேற்று முன்தினம் முதல் சென்னையில் ஓரிடத்தில் அமர்ந்து போராட வழியில்லாமல் இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தமிழ்நாடு காவல்துறையால் அலைக்கழிக்கப்படுகின்றனர். மூன்று நாட்களாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்படுகின்றனர். காவல்துறையின் இத்தகைய நடவடிக்கை போராடும் ஜனநாயக உரிமைக்கு எதிரானது.

ADVERTISEMENT

இன்று இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் வகுப்பைப் புறக்கணித்து போராடியுள்ளனர். காவல்துறை சென்னையில் திருவொற்றியூர், ஆர்.கே.நகர், பெரம்பூர் மற்றும் கோவை, மதுரை, கடலூர், தஞ்சை உள்ளிட்ட பல நகரங்களில், கல்வி வளாகத்திற்குள் புகுந்து கைது செய்துள்ளது இதுவரை நடந்திராத செயல். இது மிக மோசமான அத்துமீறல் ஆகும். காவல்துறை கல்லூரி வளாகங்களுக்குச் சென்று மாணவர்களை கைது செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. இது போன்ற ஜனநாயக விரோத அத்துமீறல்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

போராடும் உரிமையை நசுக்குகின்ற தமிழ்நாடு காவல்துறையின் செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். காவல்துறைக்குப் பொறுப்பாக இருக்கிற மாநில முதலமைச்சர் ஜனநாயக உரிமைகள் சார்ந்த போராட்ட நடவடிக்கைகளை ஒடுக்க நினைக்கும் காவல்துறையைக் கட்டுப்படுத்த வேண்டும். சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும், ஜனநாயக ரீதியில் அறப்போராட்டங்களை நடத்தும் போது, உரிய இடத்தை ஒதுக்கித் தர வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்யக் கோரும் தவெக அரசு, நீட் தேர்வுக்கு எதிராக போராடும் மாணவர்களின் ஜனநாயகக் குரல்களை நெரிப்பது பா.ஜ.க-வின் கல்விக் கொள்கைக்குத் துணை போவதாகவே அமைந்துவிடும். எனவே, தமிழ்நாடு காவல்துறையின் சட்ட விரோத அத்துமீறல்களை உடனடியாக நிறுத்த வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share