தமிழக சட்டப்பேரவையில் வரவு செலவுத் திட்ட உரை மீதான விவாதத்தில் உரையாற்றிய திமுக சட்டமன்ற உறுப்பினர் ரகுபதி, தவெக அரசு அறிவித்துள்ள ‘வெற்றி 150’ திட்டத்தைக் கடுமையாக விவரித்து விமர்சித்துப் பேசினார்.
அவர் சட்டப்பேரவையில் பேசியதாவது, “எந்தவித சத்தமும் இல்லாமல் காரியங்களைச் செய்து முடிப்பதுதான் உங்களது சாதனை . தேர்தலின்போது எப்படிச் சத்தமே இல்லாமல் வந்தீர்களோ, அதேபோலத் தற்போது சத்தமே இல்லாமல் ஒன்றிய அரசிடம் சரண்டர் ஆகிவருகிறீர்கள்.
அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுதான் இந்த ‘வெற்றி 150’ நாள் திட்டம். ஒன்றிய அரசின் விபிஜி ராம்ஜி (Viksit Bharat – Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) Act, 2025) திட்டத்தில் 40 சதவீதம் மாநில அரசின் நிதியும், 60 சதவீதம் ஒன்றிய அரசின் நிதியும் பங்களிப்பாக உள்ளது. இது கிராமப்புற வேலைவாய்ப்புக்கான திட்டம்.” முந்தைய எங்கள் ஆட்சிக்காலத்தில், மாநில உரிமைகளுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால் இந்தத் திட்டத்தை நாங்கள் ஏற்க மறுத்து எதிர்த்தோம். இதனால் நமக்கு வர வேண்டிய ரூ.3,591 கோடி நிதி கிடைக்காமல் போனது. நிதி வரவில்லை என்றாலும் கூட, மாநில அரசின் சொந்த நிதியைக் கொண்டு கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பை நாங்கள் தொடர்ந்து வழங்கினோம்.
எந்தக் காலத்திலும் ஒன்றிய அரசுக்குப் பணிய மாட்டோம் என்பதில் உறுதியாக இருந்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தையே (MGNREGA) வலியுறுத்தினோம்; விபிஜி ராம்ஜி திட்டத்தை ஏற்கவில்லை. ஆனால் இன்றைக்கு உள்ள தவெக அரசோ, சத்தமே இல்லாமல் ஒன்றிய அரசிடம் முழுமையாகச் சரணடைந்துவிட்டது” என்று எம்.எல்.ஏ. ரகுபதி குற்றம்சாட்டினார்.
