1996 – 2001 திமுக ஆட்சி காலகட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன் வருமானத்திற்கு அதிகமாக ரூ.3.92 கோடி சொத்து சேர்த்ததாக, தொடரப்பட்ட வழக்கை வேலூர் சிறப்பு நீதிமன்றம் கடந்த 2007-ஆம் ஆண்டு ரத்து செய்தது. Velmurugan reverses discharge Duraimurugan
இந்த வழக்கில் துரைமுருகனை விடுவித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் நேற்று ரத்து செய்து தீர்ப்பளித்தார். மேலும், வேலூர் சிறப்பு நீதிமன்றம் ஆறு மாதங்களுக்குள் விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்தநிலையில், அமைச்சர் துரைமுருகனை மேலும் ஒரு சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 24) ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.
2006 – 2011 திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக துரைமுருகன் இருந்தார். அப்போது 2007 – 2009 காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.40 கோடி சொத்து சேர்த்ததாக, துரைமுருகன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் மீது 2011-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கு வேலூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், 2017-ஆம் ஆண்டு துரைமுருகன் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரையும் விடுவித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி வேல்முருகன் விசாரித்தார்.
துரைமுருகன் மற்றும் அவரது மனைவி தரப்பில், “இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்துக்கள், வழக்கு காலகட்டத்திற்கு முன்பு வாங்கப்பட்டவை. துரைமுருகனின் மனைவிக்கு தனிப்பட்ட வருவாய் ஆதாரங்கள் இருந்தும், அவரை இல்லத்தரசி என்று கூறி தனிப்பட்ட வருவாய் ஆதாரங்கள் இல்லை என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆவண ஆதாரங்களை சுட்டிக்காட்டி இருவரையும் கீழமை நீதிமன்றம் விடுவித்துள்ளது. எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்பதால் தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி வேல்முருகன், “சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவியை வேலூர் சிறப்பு நீதிமன்றம் விடுவித்த உத்தரவை ரத்து செய்கிறேன். இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்து தினமும் விசாரணை நடத்தி ஆறு மாதங்களுக்குள் விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும்” என்று தீர்ப்பளித்தார். Velmurugan reverses discharge Duraimurugan