சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகனை கீழமை நீதிமன்றம் விடுவித்த உத்தரவை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 23) தீர்ப்பளித்துள்ளது. Disproportionate assets case Duraimurugan
கடந்த 1996 – 2001 திமுக ஆட்சி காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக துரைமுருகன் இருந்தார். இந்த காலகட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாக ரூ.3.92 கோடி அளவுக்கு துரைமுருகன் சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக அதிமுக ஆட்சி காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் வழக்குப் பதியப்பட்டது.
இந்தநிலையில், அமைச்சர் துரைமுருகன், அவரது மனைவி, மகன் மற்றும் மருமகள், அவரது சகோதரர் மீது பதியப்பட்ட வழக்கில் இருந்து அவர்கள் அனைவரையும் வழக்கில் இருந்து விடுவித்து 2007-ஆம் ஆண்டு வேலூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி 2013-ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பாக விசாரணை நடைபெற்று வந்தது.
துரைமுருகன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் சித்தார்த் லுத்ரா, பி.வில்சன் ஆகியோர், “துரைமுருகன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார் என லஞ்ச ஒழிப்புத்துறை குற்றம் சாட்டியிருப்பது தவறானது. இந்த வழக்கு பதிவு செய்யப்படுவதற்கு முன்பாக வாங்கப்பட்ட சொத்துக்களும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதை எல்லாம் கருத்தில் கொண்டே விசாரணை நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்துள்ளது. எனவே அந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மறுஆய்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்பதால், இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று வாதிட்டனர்.
லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, துரைமுருகனுக்கு எதிராக பதியப்பட்ட வழக்கு தொடர்பான எஃப்ஐஆர் மற்றும் குற்றப்பத்திரிகையை விளக்கி வாதிட்டார்.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த நீதிபதி வேல்முருகன், “சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்து வழக்கை ஆறு மாதங்களுக்குள் வேலூர் நீதிமன்றம் விசாரித்து முடிக்க வேண்டும்” என்று தீர்ப்பளித்தார். Disproportionate assets case Duraimurugan