முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்த திமுக இளைஞரணி செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினை கண்டித்து தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தினர் இன்று ஆகஸ்ட் 4-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

தஞ்சாவூரில் நேற்று ஆகஸ்ட் 3-ந் தேதி மேகதாது அணை கட்டுவதற்கு எதிராகவும் பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரியும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “முதல்வர் விஜய்க்கு இருக்கக்கூடிய ஒரே கவலை, தி.மு.க. மீது என்ன பொய் வழக்கு போடலாம் என்பது மட்டுமே. எங்குத் தண்ணீர் வருகிறதோ இல்லையோ, அங்கு ”தண்ணீர்” வர வேண்டும் (நான் காவிரியைச் சொன்னேன்)” என்று பேசியிருந்தார்.
மேலும், “திருட்டு லாட்டரி விற்கிற ஓர் அமைச்சர்; திருட்டு வி.சி.டி விற்கிற ஓர் அமைச்சர்; பிளாக் டிக்கெட் விற்கிற ஓர் அமைச்சர்; உருட்டுக் கட்டையோடு சுற்றித் திரிகின்ற ஓர் அமைச்சர்; எல்லாவற்றிற்கும் மேலாகப் போதைப் பவுடர் அமைச்சர்.. இப்படி மொத்த அமைச்சரவையுமே ஒரு ஜோக்கர் கூட்டமாக இன்றைக்குத் தமிழ்நாட்டில் அமைந்திருக்கிறது.. தரங்கெட்ட அரசு” இது என்றும் விமர்சித்திருந்தார்.
உதயநிதியின் இந்தப் பேச்சுக்கு எதிராக தமிழகம் முழுவதும் தவெகவினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக காவல் நிலையங்களில் தவெகவின் புகார் கொடுக்கவும் முடிவு செய்துள்ளனர்.
