தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவராக, தவெக சென்னை வடக்கு வட மாவட்ட செயலாளர் சிவா நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவராக பூச்சி முருகன் செயல்பட்டு வந்தார். தவெக ஆட்சி அமைந்ததை தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்தநிலையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவராக சிவா நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் பெரம்பூர் மாவட்ட செயலாளராக உள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தை பொறுத்தவரை, அக்கட்சிக்கு அதிகம் உறுப்பினர்கள் கொண்ட பகுதியாக பெரம்பூர் உள்ளது. சுமார் 45 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். பெரம்பூர் தொகுதியில் தவெகவின் உறுப்பினர் சேர்க்கையை மிகப்பெரிய அளவில் அதிகப்படுத்தியவர் அக்கட்சியின் பெரம்பூர் மாவட்டச் செயலாளர் சிவா.
ஆனால் இவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த தொகுதியில் இருந்துதான் முதல்வர் விஜய் வெற்றி பெற்றுள்ளார். வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சியின் போது, ”எனக்காக பெரம்பூர் தொகுதியை விட்டுக்கொடுத்தவர் சிவா” என்று மேடையில் வைத்து அவரை பாராட்டினார் விஜய்.
அதேசமயம் தவெக தலைவர் விஜய் இந்த தொகுதியில் போட்டியிடுவதை பெருமையாக நினைக்கிறேன் என்றும் அவருக்காக கடுமையாக உழைப்பேன் என்றும் சிவா கூறியிருந்தார்.
விஜய் மற்ற மாவட்டங்களுக்கு பிரச்சாரத்துக்கு சென்ற நிலையில் பெரம்பூரில் முதல்வர் விஜய்யின் வெற்றிக்காக களத்தில் இறங்கி வேலை செய்தவர் சிவா.
இந்தசூழலில் அவருக்கு மிக முக்கிய பொறுப்பான தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
