”டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி காவல்துறையால் இழுத்துச்செல்லப்பட்டும் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றும் கைது செய்யப்பட்டது ஜனநாயக உரிமைகள் மீதான அப்பட்டமானத் தாக்குதலாகும். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது” என்று முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலக அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இன்று அதிகாலை (ஜூலை 22 12.33 AM) வெளியிடப்பட்ட அறிக்கை: தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!
டெல்லியில் நடைபெற்ற இளைஞர்களின் அறவழிப் போராட்டத்துக்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி காவல்துறையால் இழுத்துச்செல்லப்பட்டும் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றும் கைது செய்யப்பட்டது ஜனநாயக உரிமைகள் மீதான அப்பட்டமானத் தாக்குதலாகும். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
நீட் தேர்வு நடைமுறைபப்டுத்தப்பட்டது முதலே அதன் மீதான நம்பகத் தன்மை குறைவது மட்டுமல்லாமல், மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி தங்களின் எதிர்காலக் கனவு மிகப்பெரிய கேள்விக்குறியாவதும் தொடர்கிறது.
நீட் தேர்வால் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் பாதிப்பிற்குள்ளாவது நின்றபாடில்லை. எனவே ஒன்றிய அரசு நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இவ்வாறு தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் நேற்று போராட்டம் நடத்திய ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் இரவு 9 மணிக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
