சகோதரரை தாக்கிய வழக்கில் சமரச தீர்வு எட்டப்படாததால் அமைச்சர் மரிய வில்சன் மீண்டும் ஆஜராக சென்னை உயர் நீதிமன்ற சமரசத் தீர்வு மையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் 2022 ஆம் ஆண்டு, சொத்து பிரச்சனையில் புதுச்சேரியில் உள்ள தனது சகோதரர் மரிய க்ளோத் வீட்டுக்குள் புகுந்து தாக்கியது தொடர்பான வீடியோ வெளியானது.
இது தொடர்பாக புதுச்சேரி லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் மரிய க்ளோத் புகார் அளித்திருந்தார்.
இந்த வழக்கு புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பலமுறை நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்தும் அமைச்சர் மரிய வில்சன் ஆஜராகவில்லை.
இந்த நிலையில் புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மரிய வில்சன் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரசத் தீர்வு மையத்தை அணுகி தீர்வு காணுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி சமரசத் தீர்வு மைய நீதிபதி பாலசுப்ரமணியம் முன் இந்த வழக்கு இரண்டாவது முறையாக இன்று (ஜூலை 21) விசாரணைக்கு வந்தது.
அப்போது அமைச்சர் மரிய வில்சன் அவரின் சகோதரர் மரிய க்ளோத் ஆகியோர் நேரில் ஆஜராகி சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் இன்றும் தீர்வு எட்டப்படாததால் மீண்டும் வரும் 28ஆம் தேதி அமைச்சர் மரிய வில்சன் மற்றும் அவரது சகோதரர் நேரில் ஆஜராக வேண்டும் என்று சமரச தீர்வு மையம் உத்தரவிட்டு பேச்சுவார்த்தையை ஒத்தி வைத்துள்ளது.
