திமுக ஆட்சியில் இருந்தபோது முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் பெயரை ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்’ என பெயர் மாற்றம் செய்து தவெக அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த தி.மு.க. ஆட்சியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை அரசு தொடக்கப் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. கடந்த 2022 செப்.15-ம் தேதி அண்ணா பிறந்த நாளில் இத்திட்டத்தை முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
பின்னர், அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தி மு.க.ஸ்டாலின் 2023 ஆக.25-ம் தேதி தொடங்கி வைத்தார்.
சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற தவெக அரசு, இத்திட்டத்தை 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் விரிவாக்கம் செய்து உத்தரவிட்டது. வரும் செப்டம்பர் 17ம் தேதி முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
தற்போது ‘முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின்’ பெயரை தவெக அரசு அதிரடியாக மாற்றம் செய்துள்ளது. இனி இத்திட்டம் ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்’ என்ற பெயரில் செயல்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக செயல்பட்டு வந்த ‘நான் முதல்வன்’, ‘மகளிர் விடியல் பயணம்’ உள்ளிட்ட பல்வேறு அரசுத் திட்டங்களின் பெயர்களைத் தவெக அரசு அண்மையில் மாற்றம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
