சோழவந்தான் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகியைப் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள கீழமாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் தனது பாட்டி வீட்டில் தங்கி, அப்பகுதியில் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். தற்பொழுது த.வெ.க கட்சியின் உள்ளூர் நிர்வாகியாகவும் செயல்பட்டு வருகிறார்.
நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்
அதே பகுதியில் வசிக்கும் பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவரின் வீட்டிற்குள் நேற்று முன்தினம் இரவில் கண்ணன் அத்துமீறி நுழைந்துள்ளார். பின்னர், அந்த மாணவிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி பயத்தில் சத்தமிட்டுக் கூச்சலிட்டுள்ளார்.
மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் ஓடி வருவதைக் கண்ட கண்ணன், அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
போலீசாரின் அதிரடி நடவடிக்கை:
இச்சம்பவம் குறித்து மாணவியின் தாய், சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த த.வெ.க நிர்வாகி கண்ணனைப் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் நேற்று அதிரடியாகக் கைது செய்தனர்.
இச்சம்பவம் குறித்துக் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
