தமிழ்நாடு அரசு தலைமை செயலகத்தில் மாநிலங்களவை (ராஜ்யசபா) சீட்டுக்காக தவெகவுடன் (TVK) காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதற்கு பாஜக (BJP) தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வானதி சீனிவாசன் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டில் காலியான ஒரு மாநிலங்களவை எம்.பி பதவியை காங்கிரஸ் கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் ஒதுக்கியுள்ளது. இது அவர்களது விருப்பம். ஆனால், கூட்டணி கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுப்பது தொடர்பான பேச்சுவார்த்தை, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.
முதலமைச்சர் ஜோசப் விஜயை, தலைமைச் செயலகத்தில் சந்தித்து, காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் கூட்டணி பேரம் பேசியிருக்கிறார்.
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏக்கள் தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அறையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இப்போது கூட்டணி பேச்சுவார்த்தையும் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றுள்ளது. இதனால் சென்னை கோட்டையில் இருப்பது தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகமா? அல்லது தவெக தலைமை அலுவலகமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தலைமை செயலகத்தில் என்ன நடந்தது?
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய்யை காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் கிரிஷ் சோடங்கர் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து ஜூன் 18-ந் தேதி நடைபெற உள்ள ராஜ்யசபா இடைத் தேர்தலில் 1 இடத்தை காங்கிரஸுக்கு ஒதுக்கீடு செய்வதாக தவெக தலைவரான முதல்வர் விஜய் அறிவித்தார்.
