பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக மாநில விளையாட்டுத் துறை நிர்வாகி அலிசா அப்துல்லா ஆகியோரை இணைத்து, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய வழக்கில் கைதான இருவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.
பாஜக மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் செயலாளர் அலிசா அப்துல்லா, சென்னை காவல் ஆணையரகத்தில் கடந்த 3-ஆம் தேதி புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் தன்னைத் தொடர்புபடுத்தி, யூடியூபர் முக்தார் அகமது மற்றும் திருச்சி சூர்யா ஆகியோர் அவதூறான கருத்துகளை வீடியோவாகப் பகிர்ந்துள்ளதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், திருச்சி சூர்யாவைக் கடந்த 4-ஆம் தேதியும், முக்தார் அகமதுவை கடந்த 9-ஆம் தேதியும் அதிரடியாகக் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
தொடர் புகார்கள்
கைது செய்யப்பட்டுள்ள முக்தார் அகமது மீது ஏற்கனவே 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் தொடர்ந்து சமூக வலைதளங்களில் இதுபோன்று அவதூறாகப் பேசி வருவதால், இவர் மீது மேலும் 20-க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
கமிஷனர் அதிரடி உத்தரவு:
இந்த விவகாரத்தில், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் பரிந்துரையின் அடிப்படையில் திருச்சி சூர்யா மற்றும் முக்தார் அகமது ஆகிய இருவரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
