மின்மாற்றி கொள்முதல் முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
கடந்த 2021 முதல் 2023 ஆம் ஆண்டு வரை தமிழக மின்சாரத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பொறுப்பு வகித்த காலகட்டத்தில், தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு சுமார் 45 ஆயிரம் எண்ணிக்கையிலான மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்டன.
இந்த கொள்முதலுக்கான டெண்டர் நடைமுறையில் 397 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி அறப்போர் இயக்கமும் அதிமுக சார்பில் வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் சரவணன் மற்றும் ராஜ்குமார் சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் அமர்வு, மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு தொடர்பான புகார்கள் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட்டனர்.
அதுபோன்று சிபிஐ விசாரணைக்கு டான்ஜெட்கோ, லஞ்ச ஒழிப்புத்துறை, தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த சூழலில் மின் மாற்றி கொள்முதல் முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
கடந்த ஜூன் 6 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 120பி(கூட்டு சதி) 420 (ஏமாற்றுதல்) ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 7 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த எஃப்ஐஆர்-ல், புகாரில் உள்ள தகவல் அனைத்தும் சட்டபூர்வமாக தண்டனைக்குரிய குற்றங்களை வெளிப்படுத்துவதால் இது ஒரு வழக்கமான வழக்காக முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விரிவான விசாரணையை சென்னை சிபிஐ ஏசிபி பிரிவை சேர்ந்த டிஎஸ்பி சந்துரு மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
