விஜய் அண்ணாச்சி அரிசி விலை என்னாச்சு – ஆர்.பி. உதயகுமார் காட்டம்

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழகத்தில் அரிசி விலை அதிரடியாக உயர்ந்துள்ள நிலையில், “அண்ணாச்சி, அண்ணாச்சி, விஜய் அண்ணாச்சி அரிசி விலை என்னாச்சு.. இப்போ போய் கேட்கலாமா? அவர் ‘ஜனநாயகன்’ படம் என்னாச்சு என்ற கவலையிலே 4 நாட்களாகத் தலைமைச் செயலகத்தில் தலைகாட்டாமல் தலைமறைவாக இருக்கிற நேரத்துல, அரிசி விலை என்னானால் நமக்கு என்ன என்ற நிலையிலே இருப்பாரோ?” என ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில், “ஜனநாயகன்’ படத்தின் பரிதாப நிலை கண்டு கவலையிலே 4 நாட்களாகத் தலைமைச் செயலகத்திற்கு முதல்வர் விஜய் தலைகாட்டவில்லை. விஜய்க்கு ‘ஜனநாயகன்’ படம் ஊத்திக்கிச்சுன்னு கவலையாக உள்ளார். அவருக்கு மக்களின் கவலையைக் கவனத்திலே கொண்டு செல்ல வேண்டியது நம்முடைய கடமையாகும்.

ADVERTISEMENT

தற்போது அனைத்து வகை அரிசிகளின் விலையும் கடந்த ஒரு மாதத்தில் 5 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை உயர்ந்திருக்கிறது. இது சராசரியாக 20 சதவீதம் வரை விலை உயர்வாகும். 26 கிலோ அரிசி மூட்டைக்கு ரூபாய் 250 முதல் 400 வரை விலை அதிகரித்து இருப்பது, ஏழை மற்றும் நடுத்தர மக்களைக் கடுமையாகப் பாதித்திருப்பதைக் கண்டு முதல்வர் விஜய் கவலையோடு இருக்கிறாரோ என்னவோ தெரியவில்லை.

தமிழகத்திற்கு ஓர் ஆண்டுக்கு 91 லட்சம் டன் அரிசி தேவை உள்ளது. ஆனால் 75 லட்சம் டன் அரிசி மட்டுமே இங்கு உற்பத்தியாகிறது. அதிலும் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படவில்லை. ஜூன், ஜூலைக்கான நீரை கர்நாடகம் திறந்து விடவில்லை; இதனால் டெல்டா பகுதிகளில் வறட்சி தலைவிரித்தாடுகிறது.

ADVERTISEMENT

நமது தேவையைப் பூர்த்தி செய்ய ஆண்டுக்கு ஒரு லட்சம் டன் உயர் ரக, சன்ன ரக அரிசி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் இம்முறை கர்நாடகாவில் போதிய மழை பெய்யாததால் சன்ன ரக அரிசி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்திற்கு அவர்கள் அனுப்பும் அரிசியின் அளவும் குறைந்துவிட்டது. அதோடு தமிழகத்தில் கடந்த 20 நாட்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்களில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையால் நனைந்து வீணாகிவிட்டன.

தற்போது தமிழ்நாட்டில் அரிசி விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. குறைந்தபட்சம் கஞ்சி காய்ச்சி குடிப்பதற்குக்கூட அரிசி கிடைக்கவில்லை, விலை ஏறிக்கொண்டே போகிறது எனத் தமிழக மக்கள் கலங்கிப் போயிருக்கிறார்கள். மக்களுக்கு ரேஷன் கடை மூலம் வழங்கும் விலையில்லா அரிசியும் தற்போது சமைத்துச் சாப்பிடும் தரத்திற்கு ஏற்ற வகையில் இல்லை என்கிற ஒரு புகாரும் வந்துகொண்டிருக்கிறது.

ADVERTISEMENT

அண்ணாச்சி, அண்ணாச்சி, விஜய் அண்ணாச்சி அரிசி விலை என்னாச்சு? என்று இப்போ போய் கேட்கலாமா? அவர் ‘ஜனநாயகன்’ படம் என்ன ஆச்சு என்ற கவலையில் 4 நாட்களாகத் தலைமைச் செயலகத்தில் தலைகாட்டாமல் தலைமறைவாக இருக்கிற நேரத்துல அரிசி விலை என்னானால் நமக்கு என்ன என்ற நிலையிலே இருப்பாரோ என்னவோ… நமக்குத் தெரியவில்லை!

ஆனால் நம்ம விஜய், நம்ம தம்பி, நம்ம அண்ணன், நம்ம மாமா, உங்க விஜி என்ன சொன்னார் தெரியுமா? மக்களுக்கு ஒரு பிரச்சனைனா இந்த விஜி வருவான், கேள்வி கேட்பான் என்று நம்ம தம்பி விஜய் சொன்னார் அல்லவா… இப்போ அரிசி விலை உயர்ந்திருக்கிறது. இந்தப் பிரச்சனைக்கு என்ன சொல்லப் போகிறார் விஜய்?

ஆனால் ஒன்று தெரிந்துகொள்ளுங்கள் முதல்வர் விஜய் அவர்களே… பொய் பேசுவதற்கு தண்டனை என்ன தெரியுமா? அவர் உண்மையைப் பேச ஆரம்பிக்கிற போது இந்த நாட்டிலே ஒருவரும் அவரை நம்ப மாட்டார்கள். அவரை நம்புவதற்கு நாடும் இருக்காது. இதுதான் விஜய்க்கு கிடைக்கப் போற தண்டனையாக இருக்கப் போகிறது.

தமிழகத்தில் முதல்முறையாக விஜய் தலைமையிலான த.வெ.க அரசு தன்னுடைய முதல் பட்ஜெட்டை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தாக்கல் செய்ய இருக்கிறது. அறம், பொருள், இன்பம் என மூன்று பகுதிகளாக அரசின் நலத்திட்டங்கள் பிரிக்கப்பட்டு அதற்கு ஏற்றாற்போல் பட்ஜெட்டில் அறிவிப்புகள் இடம்பெற இருப்பதாகக் கூறுகிறார்கள்.

இந்த த.வெ.க அரசின் முதல் பட்ஜெட்டில் ஏழைகளின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படுமா? உயர்ந்து வரும் அரிசி விலை குறைக்கப்படுமா? மக்களுக்கு ஒரு பிரச்சனைனா இந்த விஜய் வருவாரா? கேள்வி கேட்பாரா? தீர்வு கொடுப்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம். அரிசி விலை குறையுமா அல்லது கூடுமா என்பது இந்த மக்களுக்கு வெளிச்சம்… இல்லை நம்ம முதல்வருக்கே வெளிச்சம்!” எனக் கூறினார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share