தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் அரசு ஊழியர்களோ அல்லது அதிகாரிகளோ லஞ்சம் கேட்டால், பொதுமக்கள் அது குறித்து மிக எளிதாகப் புகார் அளிக்கும் வகையில் புதிய வாட்ஸ்அப் உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தொடர்ந்து “ஊழலை ஒழிப்போம்” என்று வலியுறுத்தி வருகிறார். சமீபத்தில் கரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவா், “யாராவது லஞ்சம் கேட்டால் கொடுக்க முடியாது என்று தைரியமாகச் சொல்லுங்கள், உங்களுக்குப் பின்னால் நான் இருக்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக, தற்போது லஞ்ச ஒழிப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் லஞ்ச ஒழிப்பு குறித்த விழிப்புணர்வுப் பலகைகளைப் பொதுமக்கள் எளிதில் பார்க்கும் வகையில் வைக்குமாறு அனைத்துத் துறைத் தலைவர்களுக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இது குறித்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், “தமிழ்நாட்டில் லஞ்சத்தை ஒழிக்க அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் லஞ்சம் குறித்த புகார்களை எவ்வித சிரமமுமின்றி தெரிவிக்கும் வகையில் 94981 80936 என்ற வாட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், dvac@nic.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் புகார்களை அனுப்பலாம். இது தவிர, 044-22321090, 044-22321085, 044-22310989 மற்றும் 044-22342142 ஆகிய தொலைபேசி எண்கள் வழியாகவும் பொதுமக்கள் தங்களது லஞ்சப் புகார்களைப் பதிவு செய்யலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

