முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம் பெறும் சூழல் வரும் என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
ஓசூரில் நேற்று ஜூலை 14-ந் தேதி செய்தியாளர்களிடம் பேசிய மு.வீரபாண்டியன், “முதல்வர் விஜய் அமைச்சரவையில் இடம் பெறும் சூழல் வரும். அந்த சூழல் வரும் போது இந்த மண்ணிலே இருந்து கூட (ஓசூர்) கம்யூனிச தோழர்கள் அமைச்சர்களாக வருவார்கள். அந்த காலம் நெருங்குகிறது. உங்கள் எதிர்பார்ப்புக்கு வாழ்த்துகள்” என கூறினார்.
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக் கட்சிகள் ஏற்கனவே முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெறும் சூழல் நெருங்கி இருப்பதாக வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
அமைச்சராகும் தளி ராமச்சந்திரன்
தமிழக சட்டசபை தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தளி மற்றும் திருத்துறைபூண்டி ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றது. தளி தொகுதிதான் ஓசூர் பகுதியை சேர்ந்தது. தளி தொகுதியில் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றவர் ராமச்சந்திரன். தளி தொகுதியில் 2006-ல் சுயேட்சையாகவும் 2011, 2021, 2026-ல் இ.கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.வாகவும் வென்றவர் ராமச்சந்திரன். அவருக்குதான் அமைச்சராகும் வாய்ப்பு கிடைக்கும் என்பதை வீரபாண்டியன் சூசகமாக தெரிவித்துள்ளார்.
