புது மணப்பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் மாமியார் சித்ரா தேவியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து திருப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Tiruppur Rithanya Suicide Case
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த கைகாட்டி புதூரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. அவரது மகள் ரிதன்யாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வர மூர்த்தியின் மகன் கவின் குமாருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 11ம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்திற்கு 300 சவரன் நகையும் சுமார் ரூ, 70 லட்சம் மதிப்பில் காரும் வரதட்சணையாக கொடுக்கப்பட்டு சுமார் இரண்டு கோடி செலவில் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஜூன் 28ம் தேதி சேலையூர் அருகே மொண்டிபாளையம் பகுதியில் சாலையோரம் நின்றிருந்த காரில் ரிதன்யா தென்னை மரத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தற்கொலை சம்பவத்தில் தொடர்புடைய ரிதன்யாவின் கணவர் கவின் குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ரா தேவி என மூவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் ஏற்கனவே கணவர் கவின் குமார் மற்றும் மாமனார் ஈஸ்வர மூர்த்தியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருந்த சூழ்நிலையில் இன்று ஜூலை 11-ந் தேதி, மாமியார் சித்ரா தேவியின் ஜாமின் மனுவையும் தள்ளுபடி செய்து திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரிதன்யா வழக்கில் தொடர்புடைய, கணவர், மாமனார், மாமியார் மூவரையும் வெளியே விட கூடாது. உரிய தண்டனை பெற்று தர வேண்டும் என பெற்றோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இன்று திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
