விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் செயல்பட்டு வரும் வனஜா பட்டாசு ஆலையில் இன்று (ஏப்ரல் 19) பிற்பகலில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. பலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வெடிவிபத்தை தொடர்ந்து மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்துக்குள்ளான பட்டாசு ஆலையின் உரிமையாளரான ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் முத்துமாணிக்கம் தலைமறைவானதாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலர் உயிரிழந்துள்ள துயரச் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
மீட்புப் பணிகளை விரைவுபடுத்திக் கண்காணிக்கவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறவும் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரையுமாறு மாண்புமிகு அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோரைக் கேட்டுக்கொண்டுள்ளேன்.
இதுகுறித்து அறிந்ததுமே மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டு, தேவைப்படும் அனைத்து உதவிகளையும் ஒருங்கிணைக்க அறிவுறுத்தியுள்ளேன்.” என தெரிவித்துள்ளார்.
