தூத்துக்குடி அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் (26) என்பவர், சட்டவிரோதமாக மதுபானம் விற்றதாகக் கூறி தென்பாகம் காவல்துறையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், உடலில் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சையில் இருந்த அவர் இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில், விசாரணைக்கு அழைத்துச் சென்ற நான்கு காவலர்கள் தாக்கியதாலேயே இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாகவும், அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உரிய நீதி கிடைக்கும் வரை அருணாச்சலத்தின் உடலை வாங்க மாட்டோம் என்றும் கூறி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தனது எக்ஸ் பதிவில், “நாகர்கோவிலைத் தொடர்ந்து தூத்துக்குடியிலும் காவல்துறையின் சித்திரவதைக்கு உள்ளாகி இளைஞர் ஒருவர் உயிரிழந்திருக்கும் செய்தி வேதனையளிக்கிறது.
காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் உட்படப் பல அமைச்சர்களும் அதிகாரிகளும் திரைப்படம் பார்க்க விடுப்பில் சென்றுள்ளதால், இன்றைய நாள் தமிழ்நாட்டில் ‘அரசு’ என்ற ஒன்று உள்ளதா என்பதே சந்தேகம்தான்!
நாளை பணிக்குத் திரும்பிய பின்னாவது, இந்த காவல் மரணம் குறித்து வாய் திறக்கிறார்களா என்று பார்ப்போம்.” எனத் தெரிவித்துள்ளார்.
