சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு தமக்கான துறையை மாற்றித் தர வேண்டும் என்று கேட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நேற்று ஜூலை 15-ந் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், “ ஆதி திராவிடர் நலத்துறையின் பெயர் மாற்றம் என்பது எங்களுக்குத் தெரியாது. அரசே மாற்றிவிட்டது. சமூக நீதித்துறை என பெயர் மாற்றியது எங்களுக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
அரசு தரப்பிடம் வன்னி அரசு, ”நாங்கள் எஸ்சி என்பதனால் எங்களுக்கு ஆதி திராவிடர் நலத் துறையைத் தான் தர வேண்டுமா? ஏன் எங்களுக்கு வேற துறை தரக்கூடாதா? என்று மட்டும்தான் கேள்வி எழுப்பினார். அதாவது, ”விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒரு தலித் கட்சி என்று நீங்கள் கருதுவதாக இதிலிருந்து எங்களுக்குத் தெரிகிறது; தலித்துகளுக்காக மட்டுமல்ல, அனைத்து தரப்பு மக்களுக்காகவும் போராடுகிறவர்கள் நாங்கள். ஆகவே, ஏன் இன்னொரு துறை, ஏதோ ஒரு துறையைக் கொடுங்களேன்” என்பதுதான் வன்னி அரசு வைத்த கோரிக்கை.
ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் அல்லது வன்னி அரசு சொல்லிதான், “ஆதி திராவிடர் நலத்துறை” என்பது ”சமூக நீதித்துறை” என மாற்றப்பட்டதாக ஒரு கருத்து பரப்பப்படுகிறது.
எங்களை கேட்டால், தமிழ்நாடு அரசு ஏற்கனவே இருந்தபடி இந்தத் துறையின் பெயரை, ஆதி திராவிடர் நலத்துறை என்றே மாற்றுவதுதான் எங்கள் நிலைப்பாடு. அதில் எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது” என்றார்.
