தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரிய நிலையில், இதுவரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்நிலையில் ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் குழப்பத்தை ஏற்படுத்த இடம் கொடுக்கிறார் என திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “பாஜக அல்லது அமித் ஷா, மோடி ஆகியோர் தமிழ்நாட்டு அரசியலில் தலையீடு செய்து குழப்பத்தை உருவாக்கி கொண்டிருக்கிறார்கள். தனிப் பெரும் கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. எனவே விஜய்யைப் பதவியேற்க அனுமதிக்க வேண்டும். அதுதான் அரசியல் அமைப்புச் சட்டம் காட்டும் வழிகாட்டுதல். ஆனால் ஆதரவு கோரிய நிலையில் இதுவரை ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் குழப்பத்தை ஏற்படுத்த இடம் கொடுக்கிறார். இது ஏற்புடையது அல்ல.
தவெக்குக்கு ஆதரவு தெரிவிக்கக் கூடியவர்கள் யார் யார் என்ற பட்டியலை ஆளுநர் கூற முடியாது. அவரைப் பதவியேற்க அனுமதிக்க வேண்டும். அவருக்கு பெரும்பான்மை ஆதரவு இருக்கிறதா என்பதை விஜய் சட்டமன்றத்தில் தான் நிரூபிக்க வேண்டும். அதற்கு அவரை அனுமதிக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் காலம் தாழ்த்துவதன் மூலம் பாரதிய ஜனதா கட்சி திரைமறைவில் தலையீடு செய்து குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்ற ஐயத்தை உருவாக்கியுள்ளது. இது ஏற்புடையது அல்ல” என்று தெரிவித்துள்ளார்.
