பரமக்குடி ரயில் நிலையத்தில் இன்று (செப்டம்பர் 11) சமுதாய கொடியுடன் இன்ஜின் மீது ஏறிய இளைஞர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்படும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆண்டுதோறும் செப்டம்பர் 11 அன்று தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு தினம் அனுசரிக்கப்படுவது வழக்கம்.
அதன்படி அவரது 65ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் சமுதாய, அரசியல் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இம்மானுவேல் சேகரனின் சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பரமக்குடி ரயில் நிலையத்திற்கு சென்றனர்.
அப்போது அங்கு திருச்சி – ராமேஸ்வரம் ரயில் நின்று கொண்டிருந்தது.
இதனையடுத்து ரயிலின் இன்ஜின் மேல் சில இளைஞர்கள் தங்களது சமுதாய கொடியுடன் ஏறினர்.
அப்போது எதிர்பாராதவிதமாக தேவகோட்டை பகுதியைச் சேர்ந்த முகேஷ் என்ற இளைஞர் மீது மின்சார கம்பி உரசியதில் அவர் தீயில் கருகி தூக்கி வீசப்பட்டார்.
படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மின்சாரம் பாய்ந்ததில் உடலின் பல பாகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முகேஷ் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு போராடி வருகிறார்.
இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
