கேரளாவின் பாலக்காட்டில் இருந்து நெல்லைக்கு வந்த பாலருவி விரைவு ரயில் இன்று (செப்டம்பர் 11) அதிகாலை தடம் புரண்டதால் பயணிகளிடையே பதற்றம் ஏற்பட்டது.
கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து நேற்றிரவு புறப்பட்ட பாலருவி விரைவு ரயில் இன்று அதிகாலை 4.20 மணிக்கு நெல்லை ரயில் நிலையத்திற்கு வந்தது.
பயணிகளை இறக்கிவிட்டு சுத்தம் செய்வதற்காக ரயில் பெட்டி பராமரிப்பு பணிக்காக 3வது தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்தது.
அப்போது பிட்லைன் அருகே எஸ் 3 பெட்டி திடீரென தடம் புரண்டது. இதனையடுத்து இஞ்சின் ஓட்டுநர் ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே அதிகாரிகளும் ஊழியர்களும் தற்போது மீட்பு பணியை தொடங்கியுள்ளனர். இந்த சம்பவத்தினால் ரயில் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
கடந்த 3 மணிநேரத்திற்கும் மேலாக மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில், இதுகுறித்து விசாரிக்க மதுரையில் இருந்து ரயில்வே உயர் அதிகாரிகள் நெல்லைக்கு விரைந்துள்ளனர்.
கிறிஸ்டோபர் ஜெமா