தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கட்டுமான நிறுவனம் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் சிஎம்கே ப்ராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் கட்டுமான நிறுவனம் தொடர்புடைய 80 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று (ஜனவரி 2) காலை 11 மணி முதல் சோதனை செய்து வருகின்றனர். சிஆர்பிஎஃப் அதிகாரிகள் பாதுகாப்புடன் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.
அந்தவகையில், ஈரோட்டில் 4 இடங்கள், சென்னையில் 10 இடங்கள், கோவையில் 4 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. ஈரோடு சக்தி சாலை, கருப்பண்ணன் தெருவில் உள்ள சிஎம்கே பிராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் வீட்டில் இன்று காலை சோதனை துவங்கியது.
அப்போது வெளி நபர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அதேபோல பெரியார் நகரில் உள்ள பிவி இன்ஃபரா புராஜெக்ட்ஸ் நிறுவனம் மற்றும் உரிமையாளர் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. கடந்த 20 வருடங்களாக அரசு ஒப்பந்த கட்டிட பணிகளில் ஈடுபட்டு வருவதாக சிஎம்கே நிறுவனம் தனது இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு கட்டிடம், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் உள்ளிட்ட பல்வேறு அரசு கட்டிடங்களை சிஎம்கே நிறுவனம் கட்டியுள்ளது.
வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் இந்த சோதனையானது நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2024-ஆம் ஆண்டு துவக்கத்திலேயே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவது மிக முக்கியமான விவாத பொருளாக மாறியுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“வீண் பயிற்சியில் அமலாக்கத் துறை” : கார்த்தி சிதம்பரம்
திமுகவின் நீட் கையெழுத்து இயக்கம் : உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன?