முதல்வர் கொடைக்கானல் சென்ற நிலையில் ஆய்வு செய்ய வேண்டியவர்கள் ஓய்விற்கு செல்கிறார்கள் என தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 26ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார்.துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மனைவி மற்றும் மகளுடன் துபாய் சென்றுள்ளார்.
இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் பதிவில், “ஓட்டளிக்க வரிசையில் நின்ற மக்கள் எல்லோரும் கோடையில் வீட்டில் தன் பணியில்.. ஆனால் பணியில் இருக்க வேண்டிய முதலமைச்சர் வாரிசுகளை கூட்டிக்கொண்டு கொடைக்கானலில்!!!… வாக்களிக்க துணை நின்ற மக்கள் தங்கள் அன்றாட பணியில் ஆனால் துணை முதலமைச்சர் அயல் நாட்டு பயணத்தில்…. அரசியல் என்பது அனைவருக்கும் சமமே… திமுகவின் இந்த ஏற்றத்தாழ்வு மனப்பான்மை… அவர்களின் ஏற்றத்திற்காக அல்ல இறக்கத்திற்காகவே…
ஆய்வு செய்ய வேண்டியவர்கள் ஓய்விற்கு செல்கிறார்கள். ஆனால் இதே கூட்டம் தான் அன்று அரசு வேலையாக ஊட்டி சென்ற பெருந்தலைவர் காமராஜரை கும்பி எரியுது குடல் வேகுது குளு குளு ஊட்டி ஒரு கேடா என்று கேலி பேசியவர்கள்.. புரிந்து கொள்ளுங்கள் இவர்களை.. பொதுநலம் என்று பேசிக்கொண்டு தெரியும் இந்த சுயநலவாதிகளை” என தெரிவித்துள்ளார்.
