முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பை ஏற்பார் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. வரும் மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்நிலையில், வாக்குப்பதிவுக்குப் பிறகு அமைச்சர் சேகர்பாபு இன்று திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் குடும்பத்துடன் வழிபாடு செய்தார். தொடர்ந்து பழனி கிரிவல வீதிகளில் உள்ள அம்மன் கோயில்களிலும் தரிசனம் மேற்கொண்டார்.
தரிசனத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வரும் மே 4ஆம் தேதிக்குப் பிறகு சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பை ஏற்பார்” என்று தெரிவித்தார்.
மேலும், “கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு நிலவரத்தோடு தற்போது பதிவாகியுள்ள வாக்கு சதவீதத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் பெரிய அளவில் மாற்றம் ஏதும் இல்லை. இதனால் தேர்தல் முடிவுகளில் எந்தவிதப் பாதிப்பும் இருக்காது. திமுக தலைமையிலான கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெறும்” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
