அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில், அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்து கொண்ட வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் இரவு விருந்திற்கு (White House Correspondents’ Dinner) வெளியே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏப்ரல் 25-ந் தேதி சனிக்கிழமை இரவு நிகழ்ந்த இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் ஆகியோர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
சுமார் 2,600 விருந்தினர்கள் கலந்துகொண்ட இந்த ஆண்டு வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் இரவு விருந்து, திடீர் துப்பாக்கிச்சூடு சப்தத்தால் நிலைகுலைந்தது. விருந்தினர்கள் மேசைகளுக்கு அடியில் பதுங்கியனர். இந்நிலையில் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ‘மிகவும் எதிர்பாராத சம்பவம் இது. ஆனால் பாதுகாப்பு தரப்பினர் மிகச்சிறப்பாகச் செயல்பட்டனர்’ என்று கூறினார்.
டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் கைது செய்யப்பட்ட நபர் கலிபோர்னியாவின் டொரன்ஸைச் சேர்ந்த 31 வயதான கோல் தாமஸ் ஆலன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, ”வாஷிங்டன் டி.சி. ஹோட்டலில் நடந்த பாதுகாப்பு அச்சுறுத்தலைத் தொடர்ந்து, அதிபர் டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஆகியோர் காயமின்றி பாதுகாப்பாக இருப்பதை அறிந்து நிம்மதி அடைகிறேன். அவர்கள் தொடர்ந்து பாதுகாப்பாகவும் நலமுடனும் இருக்க எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை, அது சந்தேகத்திற்கு இடமின்றி கண்டனத்துக்குரியது” என தெரிவித்துள்ளார்.
