சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு முதல்வர் விஜய் (CM Vijay) பதிலளித்து பேசிய போது திமுக எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
சட்டசபையில் இன்று ஜூன் 23-ந் தேதி முதல்வர் விஜய் பேசியதாவது: போதைப்பொருள் நடமாட்டமெல்லாம் தாறுமாறா அப்படியே பரவி கொட்டிக்கிடக்குது. இதெல்லாம் வந்து இனிஷியல் ஸ்டேஜிலயே யார் கண்ட்ரோல் பண்ணியிருக்கணும்? போலீஸ் டிபார்ட்மென்ட் அப்போ யார் கையில இருந்தது? இத்தனை கேள்வி நம்மள பார்த்து கேக்குறாங்களே ஒரே ஒரு கேள்வி தான் நான் கேக்கணும்னு தோணுது. போலீஸ் டிபார்ட்மென்ட்ட கையில வெச்சிக்கிட்டே பிகினிங்லயே, இனிஷியல் ஸ்டேஜிலயே இந்த போதைப்பொருள் நடமாட்டத்தை ஏன் கண்ட்ரோல் பண்ணலை?
மனசாட்சி உள்ளவங்க இந்த பிரச்சனை எல்லாம் ஏன் நடக்குதுங்கறது அவங்களுக்கே நல்லா தெரியும். இன்னைக்கு வந்து சட்ட ஒழுங்க பத்தி கேள்வி கேட்கக் கூடாதா அப்படின்னா, தாராளமாக கேட்கலாம். இது ஜனநாயக அரசு, மன்னராட்சி எல்லாம் கிடையாது, மனசாட்சி உள்ள மக்களாட்சி. அதனால, கேள்வி கேட்கலாம், எல்லாருக்கும் எல்லா உரிமையும் உண்டு, விமர்சனம் செய்யலாம், எல்லாருக்கும் எல்லா உரிமையும் உண்டு. ஆனா, நம்ம ஆட்சியில் என்ன நடவடிக்கைகள் எடுத்திருக்கிறோம்னு தெரிஞ்சுகிட்டு அதுக்கு ஏத்த மாதிரி ஒரு நடுநிலையா பேசினீங்கன்னா கொஞ்சம் நல்லா இருக்கும்.
சட்ட ஒழுங்கைப் பற்றி யாருக்கு என்ன யோசனை இருந்தாலும், மக்கள் நலனுக்காக யாருக்கு என்ன யோசனை இருந்தாலும், அதை தாராளமாக சொல்லலாம். நம்ம அரசு அதற்கு காதுகொடுத்து கேட்கும். ஆனா, நம்ம அரசினுடைய நிர்வாகத் திறன், அதைப் பற்றி பேசுறவங்களுக்கு, இந்த ஊரடிச்சு உலையில போட்டு ஊழல் மேல ஊழலா செஞ்சுகிட்டு, அதிலிருந்து தப்பிக்கிறதுக்கு பேருதான் நிர்வாகத் திறன் அப்படின்னு சொன்னா, அப்படிப்பட்ட ஒரு ஊழல் செய்யுற நிர்வாகத்திறனை நம்ம அரசு ஒரு நாளும் செய்யாது.
பெட்டி பெட்டியா பணத்தை வெச்சிக்கிட்டு பெட்டியை வெச்சு எல்லாம் செஞ்சுகிட்டு, போதைப்பொருள் பாதுகாப்பு கழகம் மாடல் அரசாங்கம் செஞ்ச ஒவ்வொரு ஊழலா வெளியில வந்துக்கிட்டு இருக்கு. டாஸ்மாக்ல, அது என்னப்பா அது பேரு? ஆ, பார்ட்டி ஃபண்ட் (Party fund), பார்ட்டி ஃபண்ட், கட்சி நிதி அப்படின்ற பேர்ல அடிச்ச கொள்ளையெல்லாம் ஒன்னு ஒன்னா இப்போ கவர்மெண்ட்டோட கஜானாவுக்குள்ள கொண்டு சேர்த்துகிட்டே இருக்கிறோம். இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.
கடும் அமளி
முதல்வர் விஜய்யின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேநேரத்தில் ஆளும் கட்சி தரப்பில் இருந்தும் எம்.எல்.ஏ.க்கள் குரல் எழுப்பினர். இதனால் சபையில் கடும் அமளி நிலவியது.
அப்போது சபை முன்னவர் செங்கோட்டையன், பள்ளி கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் குறுக்கிட்டுப் பேசினர்.
உதயநிதி சவால்- திமுக வெளிநடப்பு (DMK)
நீண்ட அமளிக்குப் பின்னர் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “பார்ட்டி ஃபண்ட் (Party Fund) அப்படின்னு சொல்லியிருக்கிறார். அவர் அமைச்சர் அவர்கள் அந்த பார்ட்டி ஃபண்ட் எந்த பார்ட்டின்னு கூட சொல்ல சொல்ல தயக்கமா சொல்லுங்க. நாங்கள் பேச தயாரா இருக்கோம் எதையோ ஆதாரத்தோடு எதையோ பேசணும்.
பேரவைத் தலைவர் அவர்களே நேற்று, நேற்று நான் பேசி முடிஞ்ச உடனே நீங்கள் வந்து அவை முடிஞ்சிருச்சுன்னு சொல்லிட்டீங்க. நாங்கலாம் வீட்டுக்கு போயிட்டோம். வீட்டிற்குப் போய் டி.வி. போட்டுப் பார்த்தால்… நீங்க இப்போ பேசிக்கிட்டே இருப்பீங்களா? நாங்க பாத்துக்கிட்டே இருக்கணுமா?” என கேள்வி எழுப்பினார். இதன் பின்னரும் அமளி நீடித்த நிலையில் சட்டசபையில் இருந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
