தவெக அரசுக்கு கொஞ்சம் அவகாசம் கொடுக்க வேண்டும் என்று மக்களிடம் விஜய் கோரிக்கை வித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதல்வர் விஜய் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “வலி மிகுந்த நம் அரசியல் பயணத்தில் நம்முடைய மிகப்பெரிய ஆறுதலும் பலமும் என்ன தெரியுமா? என் நெஞ்சில் குடியிருக்கும் என்னுடைய தமிழ்நாட்டு மக்களும், என் உயிருக்கு உயிரான என்னுடைய தோழர்களும் தான். அவர்களின் பலத்தால் தான், அன்று 1967-ல் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் அமைந்த சாமானியர்களின் ஆட்சி போல, 1977-ல் முன்னாள் முதல்வர் மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் தலைமையில் அமைந்த மிகச் சாமானியர்களின் ஆட்சி போல, இதோ இன்று அதே வரிசையில் 2026 சட்டமன்றத் தேடலில் இந்த விஜய்யின் தோழர்கள் இடம்பெற்ற ஒரு மிக மிகச் சாமானியர்களின் ஆட்சி அமைந்திருக்கிறது. வாகை சூடும் வரலாறு திரும்பியிருக்கிறது.
இப்படி ஒரு தீர்ப்பை மக்கள் அளித்ததால் தான் தமிழக வரலாற்றில் ஒரு மகத்தான கூட்டணி ஆட்சியை நாம் அமைத்திருக்கிறோம். “இளைஞர்களால் என்ன செய்ய முடியும்? பெண்களால் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டவர்களுக்கான பதில்தான் இன்று அமைந்திருக்கின்ற நம்முடைய ஆட்சி. ஒரே ஒரு குடும்பம் மட்டும் முக்கியம் என்று சொல்வது நம்முடைய ஆட்சி அதிகார அரசியல் இல்லை; தமிழ்நாட்டில் இருக்கின்ற ஒவ்வொரு குடும்பமும் முக்கியம் என்று சொல்வதுதான் நம்முடைய அரசியல், நம்முடைய ஆட்சி அதிகாரம். அதுதான் நம்முடைய மனசாட்சியுள்ள மக்கள் ஆட்சி.
இந்த 2026 தேர்தலை யாராலும் உடைக்கவே முடியாது என்று சொல்லப்பட்ட மதத்தை உடைத்தோம், சாதியை உடைத்தோம். முக்கியமாகக் காசு கொடுத்து வாக்கு வாங்கும் ஒரு நச்சுக் கலாச்சாரத்தையே சுக்குநூறாக, தூள் தூளாக உடைத்தெறிந்தோம். நாம் தூய்மையான மற்றும் நல்ல நிர்வாகத்தில் (Clean governance and good governance) உறுதியாக இருக்கிறோம். இப்போது மட்டுமில்லை, எப்போதுமே இப்படித்தான் இருப்போம். இது 100 சதவீதம் உண்மை என்பதால்தான், பாரம்பரியமிக்க தினத்தந்தி நாளிதழ் “ஊழலின் ஊற்றுக்கண் அடைக்கப்படுகிறது” என்று 16.06.2026 அன்று ஒரு தலைப்பை எழுதியிருக்கிறது. “ஒரு தவறு செய்தால் அது தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன் என்று எம்.ஜி.ஆர் அன்று பாடினார்; அதை இன்று விஜய் செயலில் காட்டுகிறார்” என்று அந்தத் தலையங்கத்தில் (Editorial) எழுதியிருக்கிறது. இந்த நேரத்தில் தினத்தந்திக்கு நம்முடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
“அரசியலுக்கு வந்து இரண்டே இரண்டு ஆண்டுகள் தான் ஆகிறது; உங்களுக்கு என்ன தெரியும்? உங்களால் என்ன முடியும்?” என்று கேலியாகக் கேட்டவர்களுக்குத் தினத்தந்தியின் பதிலே இப்போதைக்கு போதும் என்று நினைக்கிறேன். “என்னென்னவோ செய்வான் என்று சொல்கிறானே இந்த விஜய்; பல ஆண்டுகளாக இருக்கின்ற ஒரு பதவி வெறி பிடித்த அரசியலை உடைத்து எப்படிச் செய்வான்?” என்று நம் மக்களே யோசித்திருப்பார்கள். இதோ இப்போது நம் மக்களுக்குப் புரிந்திருக்கும். இப்பொழுதும் சொல்கிறோம், இது வெறும் ஆரம்பம் தான்.
இந்த மாபெரும் சபையிலிருந்து கேட்கும் மக்களே! நமக்குக் கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். இதற்கு முன்னால், அதாவது 2017 இறுதியிலிருந்து 2026 ஏப்ரல் வரை இருந்த புண்ணியவான்களின் ஆட்சியில் ஒவ்வொரு துறையிலும் ஏற்படுத்தப்பட்ட ஏராளமான ஓட்டைகளை அடைத்துக்கொண்டே, படிப்படியாக மக்களுக்கு நல்லவற்றையும் செய்துகொண்டே வருவோம். அதனால்தான் நமக்கு எதிராக யார் யாரோ சேரவே மாட்டார்கள் என்று நினைத்தவர்கள் எல்லாம் ஒன்றாகச் சேருகிறார்கள்; நம் ஆட்சிக்குத் தேதி குறிக்கிறார்கள். சரி, அவர்களை நம் மக்களே பார்த்துக் கொள்வார்கள். ” என்றார்.
