ஷூட்டிங்கில் இருந்து நேராக வந்து முதல்வர் ஆகவில்லை -அரசியல் பயணம் குறித்து விஜய் பேச்சு

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay

விஜய் ஏதோ படப்பிடிப்பில் இருந்து நேரடியாக வந்து முதலமைச்சர் ஆனது போன்ற ஒரு பிம்பத்தைச் சிலர் உருவாக்க முயல்வதாகவும், ஆனால் தனது இந்த உயர்விற்குப் பின்னால் முப்பது ஆண்டுகால உழைப்பும், தமிழக மக்களின் தாயன்பும் இருப்பதாகத் தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார்.

மக்களின் அன்பே காரணம்

தமது அரசியல் பயணம் குறித்துப் பேசிய முதல்வர் விஜய், “சாதாரண நடிகனாகத் தொடங்கி, நேர்மையான உழைப்பால் மட்டுமே இந்த நிலையை எட்டியுள்ளேன். எனது உழைப்பையும் தாண்டி, ஒவ்வொரு வீட்டுப் பிள்ளையாக என்னை ஏற்றுக் கொண்ட தமிழக மக்களின் அன்பே எனக்குக் கிடைத்த வரம். 1990-களில் ரசிகர் மன்றமாகத் தொடங்கி, நற்பணி மன்றம், விஜய் மக்கள் இயக்கம் எனப் படிப்படியாகவே மக்களின் மத்தியில் வளர்ந்தோம். 2008-ல் ஈழத்தமிழர்களுக்காக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினோம். தொடர்ந்து கல்வி, சமூக சேவை, வெள்ள நிவாரணம், கொரோனா கால உதவி, விலையில்லா விருந்தகம், குருதியகம் என மக்கள் நலப் பணிகளைத் தொடர்ந்து விரிவுபடுத்தினோம்” என்று குறிப்பிட்டார்.

ADVERTISEMENT

சமூகப் பிரச்சனைகளும் அரசியல் நகர்வுகளும்
திரைப்படங்கள் வாயிலாக ஊழல் எதிர்ப்பு, சமூக நீதி, கல்வி மற்றும் அரசியல் குறித்துப் பேசியதால் சந்தித்த பிரச்சனைகளை பேசினோம். அதனால் தனது படங்கள் சந்தித்த சந்தித்து வரும் பிரச்சனை அனைவரும் தெரியும். 2011-ல் நாகப்பட்டினத்தில் மீனவர் ஆதரவுப் பொதுக்கூட்டம், 2017 ஜல்லிக்கட்டுப் போராட்டம், 2018 ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நேரில் ஆறுதல், மற்றும் 2023 உள்ளாட்சித் தேர்தல் வெற்றிகள் எனத் தங்களின் தொடர் மக்கள் பணிகளைப் பட்டியலிட்டார்.

டிவிகே-வின் கொள்கை மற்றும் தலைவர்கள்

2024-ல் தமிழக வெற்றி கழகத்தைத் தொடங்கியவுடன் CAA-வுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டதைக் குறிப்பிட்ட அவர், விக்ரவாண்டி மாநாட்டில் கட்சியின் கொள்கைத் தலைவர்களாகத் தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அண்ணல் அம்பேத்கர், வீரமங்கை வேலுநாச்சியார் மற்றும் மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகிய ஐந்து பேரை அறிவித்ததை நினைவு கூர்ந்தார். இந்தியாவில் இரண்டு பெண் ஆளுமைகளைக் கொள்கைத் தலைவர்களாக அறிவித்த ஒரே கட்சி தங்களது கட்சி தான் என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.

ADVERTISEMENT

பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றும், தங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு என்றும் வெளிப்படையாக அறிவித்தோம் என்பதையும் சுட்டிக்காட்டினார். பெண் கல்வி, சமூக சீர்திருத்தம் போன்ற பெரியாரின் கருத்துகளையும்; அம்பேத்கரின் சமத்துவத்தையும்; காமராஜரின் மதச்சார்பின்மை மற்றும் நேர்மையான நிர்வாகத்தையும்; வேலுநாச்சியாரின் மண் மீட்பு, சமூக நல்லிணக்கத்தையும்; அஞ்சலை அம்மாளின் விடுதலை வேட்கையையும் தங்களது கட்சி பின்பற்றுவதாகத் தெரிவித்தார். ‘மதச்சார்பற்ற சமூக நீதி’ மற்றும் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பதே தங்களின் அடிப்படைக் கோட்பாடு என்றும், மதுரை மாநாட்டில் அறிஞர் அண்ணா மற்றும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் ஆகியோரைத் தங்களின் அரசியல் வழிகாட்டிகளாக ஏற்றுக்கொண்டதாகவும் அவர் கூறினார்.

2026 தேர்தல் வெற்றி குறித்துப் பதிவு

தங்களைக் ‘கட்சியைத் தொடங்கிய நடிகர்’ என நையாண்டி செய்பவர்கள் பற்றிக் கவலை படப் போவதில்லை எனக் குறிப்பிட்ட முதல்வர் விஜய், தங்களது அரசியல் பயணம் மிகவும் வெளிப்படையானது என்றார். மேலும், “நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் எந்தவொரு கூட்டணியும் இல்லாமல் தனித்துப் போட்டியிட்டோம். மக்கள் நம்மைத் தெளிவாகப் புரிந்துகொண்டதாலும், கட்சியின் தொண்டர்களின் உழைப்பாலும் 35 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளோம். 1 கோடியே 72 லட்சம் வாக்குகளுடன் தமிழகத்திலேயே தனிப்பெரும் கட்சியாக நாம் உருவெடுத்துள்ளோம்” என தெரிவித்தார்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share