4 ஆண்டு சாதனையில் இதுதான் டாப்… மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்டாலின் மகிழ்ச்சி செய்தி!

Published On:

| By Selvam

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உறுப்பினராக வகைசெய்யும் அரசினர் திருத்தச் சட்டமுன்வடிவுகளை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 16) சட்டமன்றத்தில் அறிமுகம் செய்தார். Stalin announces representation persons

அப்போது, முதல்வர் ஸ்டாலின் பேசும்போது,

“மாற்றுத்திறனாளிகளின் நலனில் அக்கறையுடன் பல்வேறு முன்னோடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற திராவிட மாடல் அரசு, இன்றைக்கு நாம் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு சட்டமுன்வடிவுகளை அறிமுகப்படுத்தப் போகிறோம்.

கலைஞர் தான் “மாற்றுத்திறனாளிகள்” என்ற சொல்லை முதன்முதலாகப் பரிவோடு உருவாக்கினார். அதே அக்கறையோடுதான் நானும் அந்தத் துறையைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன்.

நாங்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வருவதற்கு முன்பு, இந்தத் துறைக்கான நிதி ஒதுக்கீடு 667 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால், இப்போது, இந்த நிதியாண்டில் ஆயிரத்தி 432 கோடியாக, அதாவது இரண்டு மடங்கு உயர்த்தி இருக்கிறோம்.

மாற்றுத்திறனாளிகளுக்கு கருணை அடிப்படையில் மட்டுமல்ல, உரிமை அடிப்படையில் நாம் திட்டங்களைத் தீட்டி வழங்கிக் கொண்டிருக்கிறோம்.

மாற்றுத்திறனாளிகளின் குரல், உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிக்க வேண்டுமென்று கடந்த பிப்ரவரி 27 ஆம் நாள் கொளத்தூரில் நடைபெற்ற தந்தை பெரியார் அரசு பல்நோக்கு மருத்துவமனை திறப்பு விழாவில் இதை நான் அறிவித்தேன்.

அடுத்த நாளே பேராசிரியர் தீபக் நாதன் தலைமையில் என் வீட்டிற்கு வந்த மாற்றுத்திறனாளி தோழர்கள் எனக்கு நன்றியையும், பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்தார்கள்.

12 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு இதன் மூலமாக உள்ளாட்சி அமைப்புகளில் வாய்ப்புக் கிடைக்கும். கடைக்கோடியில் இருக்கக்கூடிய மாற்றுத் திறனாளிகளுக்கும், அவர்கள் வாழும் ஊரிலேயே மரியாதை கிடைக்கும்.

என்னைச் சந்திக்க வந்தபோது, தீபக், “இந்த நான்கு ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளிலேயே இதுதான் டாப்” என்று நெகிழ்ச்சியோடு என்னிடம் தெரிவித்தார்.

அவர்களுக்கான இந்தச் சிறப்புமிகு சட்டம் முன்மொழியக்கூடிய இந்த வேளையிலே, சட்டமன்றத்திலே இருக்கிற பார்வையாளர் மாடத்திலிருந்து இதையெல்லாம் அவர்கள் காண்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.

உள்ளாட்சி அமைப்புகளில் அவங்களுடைய உரிமையை நிலைநாட்ட திராவிட மாடல் அரசு உறுதியுடன் இருக்கிறது.

தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து வகை உள்ளாட்சி அமைப்புகளிலேயும் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கக்கூடிய வகையில், நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரில் தக்க சட்டமுன்வடிவு அறிமுகப்படுத்தப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவித்திருந்தோம்.

இப்போது அந்தச் சட்டமுன்வடிவுகளை முன்மொழிவதை நான் எனது வாழ்நாள் பெருமையாகக் கருதுகிறேன். அருந்ததியின மக்களுக்கு 3 விழுக்காடு வழங்கும் சட்டமுன்வடிவுகளை இதே மாமன்றத்தில் தாக்கல் செய்யக்கூடிய பெருமையை நான் அடைந்தேன். 2009-ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் கலைஞர் எனக்கு அந்த வாய்ப்பை வழங்கினார். அன்றைக்கு இருந்த அதே மனநிறைவோடு நான் இன்றைக்கு உங்கள் முன்பு நிற்கிறேன்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை ஆகிய துறைகளின் சார்பாக இந்த இரண்டு சட்டமுன்வடிவுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், அதாவது, கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் மாற்றுத்திறனாளிகள் நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உறுப்பினராக ஆக்கப்படுகிறார்கள்.

இதன்மூலமாக உள்ளாட்சி அமைப்புகளில், மாற்றுத் திறனாளிகளுடைய பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட்டு, அவர்கள் தங்களுக்கான வாய்ப்புகளையும், சிறப்புரிமைகளையும் சமமாகப் பெறுவதற்கு இந்தச் சட்டமுன்வடிவுகள் வழிவகுக்கும். இது, ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்று இந்த அரசு தொடர்ந்து வலியுறுத்துகிற சமூகநீதியை அடைவதற்கான மற்றுமோர் முன்னெடுப்பு.

இதனை நடைமுறைப்படுத்துவதற்காக தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, தமிழ்நாடு நகர்ப்புர ஊராட்சிகள் சட்டம் 1998 ஆகியவற்றில் திருத்தங்கள் முன்மொழிந்து, சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் இந்த அவைக்கு வழங்குகிறேன்.

இந்தச் சட்டமுன்வடிவுகளின் மூலம் மாற்றுத்திறனாளிகளுடைய குரல் உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிப்பது மட்டுமல்லாமல், அவர்கள் உள்ளாட்சி நிர்வாகத்தை வழிநடத்துகிற வல்லமை பெற்றவர்களாகத் திகழ்வார்கள்.

ஒடுக்கப்பட்ட மக்களை அதிகாரம் பொருந்தியவர்களாக உயர்த்துவதும், அதிகாரத்தில் பங்கெடுப்பவர்களாக மாற்றுவதும் தான் திராவிட இயக்கத்தினுடைய நோக்கம்.

அந்த அடிப்படையைக் கொண்டதுதான் இந்தச் சட்டம் என்பதைத் தெரிவித்துக் கொண்டு, 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தச்) சட்டமுன்வடிவு மற்றும் 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (இரண்டாம் திருத்தச்) சட்டமுன்வடிவு ஆகியவற்றை அறிமுகம் செய்கிறேன்.


இந்தச் சட்டத் திருத்தத்தினால் விளையப் போகும் பலன் பற்றி ஒரு விவரத்தைக் குறிப்பிட விரும்புகிறேன்.

தற்போது நகர்ப்புற உள்ளாட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் 35 பேர் மட்டுமே மாற்றுத்திறனாளிகள் ஆவார்கள்.

ஆனால், இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, சுமார் 650 மாற்றுத் திறனாளிகள் நகர்ப்புற உள்ளாட்சிகளிலும், 12,913 மாற்றுத் திறனாளிகள் கிராமப் பஞ்சாயத்துக்களிலும், 388 மாற்றுத் திறனாளிகள் ஊராட்சி ஒன்றியங்களிலும், மாவட்ட ஊராட்சிகளில் 37 மாற்றுத் திறனாளிகளும் நியமனம் செய்யப்படுவார்கள்.

அவர்களது குரல் அந்த உள்ளாட்சி அமைப்புகளில் எல்லாம் எதிரொலிக்கும். இது இந்தச் சட்டத்தினால் விளையப்போகும் மிகப் பெரிய நன்மை என்பதை இங்கே நான் குறிப்பிட விரும்புகிறேன்” என்று தெரிவித்தார். Stalin announces representation persons

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share