தொழிற்சாலைகள் அமைக்க கடனுதவி பெறுவதற்கான சிறப்பு முகாம் வருகிற 17ஆம் தேதி முதல் அடுத்த செப்டம்பர் 2ஆம் தேதி வரை சென்னையை அடுத்த மறைமலை நகரில் நடக்கிறது.
இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் ஒரு தமிழ்நாடு அரசு நிதிக்கழகம் ஆகும்.
1949ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தக் கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது.
இந்தக் கழகம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும் தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியைப் பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்பு திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.
மறைமலை நகர் கிளை அலுவலகத்தில் எண்-42 மற்றும் 43, முதல் தளம், எம்.ஜி.ஆர்.சாலை, மறைமலை நகர், சென்னை குறு சிறு மற்றும் நடுத்தர (எம்.எஸ்.எம்.எம்.இ) தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் மேளா வருகிற 17ஆம் தேதி முதல் 2ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்தச் சிறப்பு தொழில் கடன் மேளாவில் டிஐஐசியின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய மாநில அரசுகளின் மானியங்கள் (மூலதன மானியம் மற்றும் இதர மானியங்கள்) புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது.
தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவிகித முதலீட்டு மானியம் ரூபாய் ஒன்றரை கோடி வரை வழங்கப்படும். இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவிகிதம் சலுகை அளிக்கப்படும்.
இந்த அரிய வாய்ப்பினை புதிய தொழில்முனைவோர், தொழில் அதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்” என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ்