சபாநாயகர் பதவி.. ‘ஷாக்’ வரலாறு சொன்ன முதல்வர் விஜய்

Published On:

| By Mathi

CM Vijay Assembly

’சபாநாயகர்’ பதவி தொடர்பான அதிர்ச்சி தரக் கூடிய வரலாற்று பின்னணியை தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் இன்று விவரித்தது பேசுபொருளானது.

தமிழக சட்டசபை சபாநாயகராக ஜேசிடி பிரபாகர் ஒருமனதா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சட்டசபையில் அவருக்கு அனைத்து கட்சியினரும் வாழ்த்து தெரிவித்தனர்.

ADVERTISEMENT

இந்நிகழ்வில் முதல்வர் விஜய் பேசியதாவது: ”மக்களே, மக்களுக்காக, மக்களால் நடத்தும் ஆட்சி மக்களாட்சி” என்றார் அமெரிக்க முன்னாள் குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கன். இன்றைக்கு அமைந்துள்ள மக்களாட்சி மலர்வதற்கு மக்களிடம் உள்ள பெரும் எதிர்பார்ப்பு, அவர்களுடைய எதிர்பார்ப்புகளை இப்பேரவையின் கவனத்திற்கு கொண்டு வந்து அதனை செயல்படுத்துவதற்கான திட்டங்களை, சட்டங்களை அமல்படுத்த வேண்டிய பொறுப்பு இப்பேரவைக்கு உள்ளது.

அதிகமான மக்கள் இந்த ஆட்சி காலத்தில் அதிக நன்மை பெற்றுள்ளார்கள் என்கிற வகையில் நம்முடைய செயல்பாடுகள் அமைய வேண்டும்.

ADVERTISEMENT

இங்கே அனைவரும் சமம். ஓர் உறுப்பினரை கொண்ட கட்சிகள் இங்கே இடம் பெற்றிருந்தாலும், அவர்களுடைய கருத்துக்களுக்கும் அதிக எண்ணிக்கை பெற்ற தமிழக வெற்றிக் கழக உறுப்பினர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கும் சமமாகவே மதிப்பளிக்கப்பட்டு நல்லவை ஏற்கப்பட்டு, அல்லவை நிராகரிக்கப்பட்டு ஜனநாயகத்தின் இதயமாகவும் மூளையாகவும் இப்பேரவை செயல்பட வேண்டும். அதற்குரிய வகையில் பெருமை வாய்ந்த வரலாற்று சிறப்பு கொண்ட இப்பேரவையை நடத்திச் செல்லும் பண்பை பெற்றுள்ளவரையே தமிழக வெற்றிக் கழகம் முன்மொழிந்து தாங்கள் இன்றைக்கு இந்த ஆசனத்தில் அமர்ந்துள்ளீர்கள்.

வரலாற்று பின்னணி

தாங்கள் பேரவைத் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். தங்களை இந்த ஆசனத்தில் பேரவை முன்னவரும் எதிர்க்கட்சித் தலைவரும் தங்களுடைய கரங்களைப் பிடித்து அழைத்துச் சென்று அமர வைத்தார்கள். இந்த சம்பிரதாயம் எப்படி வந்தது என்று சொன்னால் சுவாரஸ்யமாக இருக்கும், பெரிய வரலாறே இச்சம்பவத்தில் உள்ளது.

ADVERTISEMENT

இங்கிலாந்து நாட்டில் உள்ள நாடாளுமன்ற நடைமுறைகளைப் போன்றதே நம்முடைய நாடாளுமன்ற நடைமுறைகளும். மன்னராட்சி இருந்த காலத்திலேயே அங்க நாடாளுமன்றம் இயங்கியுள்ளது. அக்காலத்தில் அனைத்து அதிகாரங்களையும் பெற்ற மன்னரும் இருந்தார், நாடாளுமன்றமும் இயங்கியது.

அங்கே மன்னர் ஒரு பணியைச் செய்ய வேண்டும் என்று விரும்புவார், நாடாளுமன்றம் அவருடைய விருப்பத்தை பெரும்பாலும் நிராகரிக்கும். மன்னர் விரும்பிய காரியத்தை நாடாளுமன்றம் நிராகரித்துவிட்டது என்கிற செய்தியை மன்னருக்குச் சொல்ல வேண்டியவர் நாடாளுமன்றத் தலைவர் ஸ்பீக்கர் என்பார்கள்.

நாடாளுமன்றத்தின் கருத்தை மன்னரிடம் சொல்ல வேண்டியவர் ஸ்பீக்கர், அதற்குத் துணிவு வேண்டும்.

சில பணிகளைச் செய்வதற்குத் தான் நாடாளுமன்றத்தின் அனுமதி வேண்டுமே தவிர, அந்த ராஜ்ஜியத்தில் உள்ள எந்தப் பிரஜைக்கும் மரண தண்டனை விதிக்கும் அதிகாரம் மன்னருக்கு உண்டு. தான் விரும்பியதை நாடாளுமன்றம் நிராகரித்துவிட்டது என்று சொல்லும் ஸ்பீக்கருக்கு மரண தண்டனை விதிக்கும்படி ஆணையிடுவார். தலையை வெட்டிவிடுங்கள் என்ற ஆணையிடுவார்கள். இது பலமுறை நடந்ததால் யாருமே இந்த ஸ்பீக்கர் பதவிக்கு வர விரும்பமாட்டார்கள்.

எனவே, புதிதாக நாடாளுமன்றம் அமையும்போது ஸ்பீக்கர் பதவிக்கு ஒருவர் அறிவிக்கப்பட்டவுடன் அவர் உடனே தலை தப்பித்தால் போதும் என ஓட்டம் பிடிப்பார். அவை முன்னவரும் எதிர்க்கட்சித் தலைவரும் அவரைத் தடுத்து நிறுத்தி அவர் கைகளைப் பிடித்து இழுத்து வந்து ஆசனத்தில் அமர வைப்பார்கள். இதுதான் அந்த காலத்தில் இருந்து வந்த மரபு.

ஜனநாயக முறை ஏற்பட்ட பிறகும் இம்மரபு தொடர்கிறது. நிச்சயமாக தமிழக வெற்றிக் கழக உறுப்பினர்கள் அனைவருமே உங்களுக்கு உதவிகரமாகவே இருப்பார்கள் என்கிற வாக்குறுதியை இந்நேரத்தில் அளிக்க விரும்புகிறேன். பேரவையின் மாண்பையும் கண்ணியத்தையும் பேரவை உறுப்பினர்களின் கண்ணியத்தையும் காக்க வேண்டிய பொறுப்பை உங்களிடத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள்.

தற்காலிகப் பேரவைத் தலைவர் பொறுப்பில் மிகச் சிறப்பாகப் பணியாற்றிய நம்முடைய உறுப்பினர் கருப்பையாவை சந்திக்க நேற்றைக்குச் சென்றிருந்தேன். அங்கே முந்தைய பேரவைத் தலைவர்கள் படங்களைக் கண்ணுற்றபோது, அவர்களைப் பற்றி அறிந்தபோது உண்மையிலேயே எனக்குப் பெருமிதம் தந்தது. ஏனென்றால் எடுத்துக்காட்டாக விளங்கும் ஜே. சிவ சண்முகம் பிள்ளை, டாக்டர் கிருஷ்ணராவ், எஸ். செல்லப்பாண்டியன் ஆகியோருடைய வரிசையில் மிகச் சரியான ஒருவரையே நாம் முன்மொழிந்துள்ளோம் எனப் பெருமையடைந்தேன்.

அதேபோன்றுதான் நம்முடைய பேரவைத் துணைத் தலைவர் அவர்களும். நீங்கள் இருவருமே மிகச் சாதாரணக் குடும்பத்தில் பிறந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்கிற அவாவில் செயல்பட்டு வந்தவர்கள். “குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்” எனும் வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப சட்டமன்ற நடவடிக்கைகள் சீராக, செம்மையாக, அமைதியாக நடைபெறும் வகையிலும் சட்டமன்ற ஜனநாயகப் பண்புகள் நெறிமுறைகள் பேணிப் பாதுகாக்கப்படும் வகையிலும் இப்பேரவைக்குப் பேரவைத் தலைவரும் பேரவைத் துணைத் தலைவரும் பெருமை சேர்ப்பீர்கள் எனும் நம்பிக்கை எனக்கு உண்டு.

அரசியலுக்கு அப்பாற்பட்டு மனிதர்களை மதிக்கும் நல்ல பண்புகள் நிலைநாட்டப்பட வேண்டும். தமிழ்ப் பண்பாடு போற்றப்பட வேண்டும். அவையின் மரபும் மாட்சிமையும் மதிப்பும் காக்கப்பட வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் அந்தப் பதவி ஏற்றுள்ள உங்கள் இருவராலும் காப்பாற்றப்படும் என்னும் நம்பிக்கையை மீண்டும் தெரிவித்து விடைபெறுகிறேன். இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share