திருப்பத்தூர் தவெக எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதி சட்டசபை நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தடை விதித்துள்ளது. இதனால் முதல்வர் விஜய் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதி பங்கேற்க முடியாது. திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் பெரியகருப்பன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளராக சீனிவாச சேதுபதி, திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் போட்டியிட்டனர். மே 4-ந் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது இருவருக்கும் இடையே கடும் போட்டி இருந்தது. 233 தொகுதிகள் முடிவு அறிவிக்கப்பட்ட நிலையில் திருப்பத்தூர் தொகுதி முடிவு மட்டும் இழுபறியாக இருந்தது. இதன் பின்னர் 1 ஓட்டு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர்.
தமது தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட சீனிவாச சேதுபதி எம்.எல்.ஏ.வாக பதவியேற்க தடை விதிக்க கோரி திமுகவின் பெரியகருப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் கோடைகால அமர்வு நீதிபதிகள் விக்டோரியா கவுரி மற்றும் செந்தில் குமார் ஆகியோர் விசாரித்தனர்.
இவ்வழக்கு விசாரணையில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்குட்பட்ட தபால் வாக்குகள், வேலூர் திருப்பத்தூர் மாவட்டத்துக்கு மாற்றி அனுப்பப்பட்டதாக கூறப்பட்ட புகாரை தேர்தல் ஆணையம் மறுத்திருந்தது.
இந்நிலையில் இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், தவெக எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதி சட்டசபை நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை விதித்து உத்தரவிட்டனர். இதனால் முதல்வர் விஜய் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதி பங்கேற்க முடியாது.
