தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய், மே 10ஆம் தேதி தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
நேற்று நடைபெற்ற 17ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தில் பெரம்பூர் எம்எல்ஏவாக விஜய் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “பொதுமக்கள் நலன் கருதி, வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் தற்போது 4,765 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள கடைகளை ஆய்வு செய்து கண்டறியுமாறு முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, மேற்கண்ட மூன்று பகுதிகளில் மொத்தம் 717 மதுபானக் கடைகள் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டது. பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் என மொத்தம் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை அடுத்த இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2023ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகே செயல்பட்டு வந்த 500 மதுக்கடைகள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
