விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த பட்டாசு தயாரிப்புக் கூடத்தில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசியை அடுத்த நாராயணபுரத்தில், சட்டவிரோதமாகத் தகர கொட்டகை அமைத்து பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கம் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாகப் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.
அடுத்தடுத்து இருமுறை பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டதில், விண்ணை முட்டும் அளவிற்கு அடர்ந்த கரும்புகை வெளியேறி வருகிறது. இந்த விபத்தின் காரணமாகச் சுற்றுவட்டாரத்தில் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்குப் பலத்த அதிர்வு உணரப்பட்டதால் அப்பகுதி மக்கள் கடும் பீதியடைந்தனர்.
இவ்விபத்தில், இதுவரை 2 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராமச்சந்திரன் என்ற தொழிலாளி 90 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும், சிலர் தீ விபத்தில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
தொடர்ந்து பட்டாசுகள் வெடித்துச் சிதறி வருவதால், தீயணைப்பு வீரர்கள் உள்ளே செல்ல முடியாமல் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் நீடிக்கிறது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
