நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில் மத்திய கல்வித் துறை செயலாளர் (Union Education Secretary) வினீத் ஜோஷி அந்த துறையில் இருந்து அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக நரேஷ் கங்வார் புதிய கல்வித் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கல்வித்துறை செயலாளராக வினீத் ஜோஷி பணிபுரிந்து வந்தார். தற்போது வினீத் ஜோஷி, பஞ்சாயத்து ராஜ் அமைச்சக செயலாளராக இடம் மாற்றம் செய்யபப்ட்டுள்ளார்.
நீட் தேர்வு மோசடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித் துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது அவரை பிரதமர் மோடி பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பது காக்ரோச் ஜனதா கட்சியின் கோரிக்கை. இந்த கோரிக்கையை முன்வைத்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
இந்நிலையில் நீட்தேர்வு மோசடி தொடர்பான குற்றங்களுக்கு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்; இது தொடர்பாக இன்று ஜூலை 24-ந் தேதி அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என பிரதமர் மோடி, ஜூலை 23-ந் தேதி நள்ளிரவில் வீடியோ வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் மத்திய கல்வித் துறை செயலாளர் வினீத் ஜோஷி அத்துறையில் இருந்து நீக்கப்பட்டு வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும் மத்திய அரசின் பல்வேறு துறைகளின் 16 செயலாளர்களும் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
விரைவு நீதிமன்ற நீதிபதி நியமனம்
இதனிடையே வினாத்தாள் கசிவு வழக்குகளை விசாரிப்பதற்கான விரைவு நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதியாக நீதிபதி அனு குரோவர் பாலி்காவை டெல்லி உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது.
தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவுகள் தொடர்பான குற்ற வழக்குகளை விரைவு நீதிமன்றம் விரைவாக விசாரித்து தண்டனை வழங்கும்.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்த நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தால் சிறப்பு நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
