இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும் அவர்களது விசைப் படகுகளையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இன்று (செப்டம்பர் 20 ) கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “இலங்கை கடற்படையினரால் செப்டம்பர் 20ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 8 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதையும்,
அவர்களின் விசைப்படகு பறிமுதல் செய்யப்பட்டதையும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

இதுதவிர, ஏற்கெனவே 95 மீன்பிடி படகுகளும், 11 மீனவர்களும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளனர்.
அண்மையில் 12 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதில் வெளியுறவுத் துறை அமைச்சகம் எடுத்த ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அதேவேளையில், கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களின் மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கைகள் வாயிலாக தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” எனவும் கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
