செந்தில் பாலாஜி தம்பி முன்ஜாமின் கோரிய வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழக ஊத்தங்கரை எம்எல்ஏ இளையராஜாவிடம், இந்த ஆட்சியைக் கவிழ்க்க 35 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாகத் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோரும் சேர்க்கப்பட்ட நிலையில், அவர்கள் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர்கள் ஆஜராகவில்லை.
இதற்கிடையே, செந்தில் பாலாஜி தம்பி அசோக் குமார் முன்ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், அரசியல் காரணங்களால் இந்த வழக்கில் நான் சேர்க்கப்பட்டுள்ளேன். இந்த குற்றச்சாட்டுகளுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி குமரப்பன் முன்பு இன்று (ஜூலை 6) விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் இந்த வழக்கில் பதில் அளிக்கக் கால அவகாசம் வேண்டும் என்று கோரப்பட்டது.
அதுபோன்று இந்த வழக்கில் எம்எல்ஏக்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் வழக்கை எம்பி எம்எல்ஏ வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி குமரப்பன் சம்பந்தப்பட்ட நீதிபதிக்கு வழக்கை மாற்ற பதிவாளருக்கு உத்தரவிட்டார்.
அதன்படி தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் எம்பி எம்எல்ஏக்களுக்கான வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதி இளந்திரையன் முன்பு வழக்கு மாற்றப்பட்டது.
அதன்படி இந்த வழக்கு வரும் 8ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
