அமலாக்கத் துறையின் லுக் அவுட் நோட்டீசை எதிர்த்து செந்தில் பாலாஜி தம்பி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் 3 வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது.
போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்க த்துறை சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கில் அசோக்குமார் தலைமறைவாக இருந்த நிலையில் அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
இந்த லுக் அவுட் நோட்டீசை திரும்பப் பெற அமலாக்கத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அசோக் குமார் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் அருள்முருகன் அமர்வில் இன்று (ஜூலை 6) விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் இது தொடர்பாகப் பதிலளிக்கக் கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அசோக்குமாரின் மனு மீதான விசாரணையை மூன்று வாரங்களுக்குத் தள்ளி வைத்து உத்தரவு பிறப்பித்தனர்.
