திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வழக்கில் தமிழக அரசு தரப்பிடம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று சரமாரியான கேள்விகளை கேட்டனர்.
எ.வ.வேலு அமைச்சராக இருந்தபோது, சாலை உள்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்தியதில் முறைகேடுகள் நடந்ததாகவும், பணிகள் தொடங்குவதற்கு முன்பே ஒப்பந்ததாரருக்குப் பணம் வழங்கப்பட்டதன் மூலம் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் புகார் கூறப்பட்டது.
அறப்போர் இயக்கம்’ என்ற அமைப்பு அளித்த இந்த புகாரின் அடிப்படையில், தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) ஜூன் 25-ந் தேதி எ.வ.வேலு உள்ளிட்டோர் மீது எப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்தது. அதே நாளில் எ.வ. வேலுவின் வீடு மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதன் பின்னர், சிங்கப்பூருக்கு எ.வ.வேலு சிகிச்சைக்காக சென்றார். அப்போது, எ.வ.வேலுவை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கும் “லுக் அவுட்” நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இதற்கு எதிராக எ.வ.வேலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், எ.வ.வேலுவுக்கு எதிராக ஜூலை 28-ந் தேதி வரை கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என உத்தரவிட்டார். மேலும் எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸையும் நிறுத்தி வைத்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு உடனடியாக மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. இதனிடையே சிங்கப்பூர் சென்ற எ.வ.வேலு சென்னை திரும்பினார். அத்துடன் இன்று லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கும் ஆஜரானார்.
உச்சநீதிமன்றத்தில் விசாரணை
இதனிடையே உச்சநீதிமன்றத்தின் விக்ரம்நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் பெஞ்ச் முன்பாக தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது இன்று ஜூலை 15-ந் தேதி விசாரணை நடைபெற்றது.
தமிழக அரசு தரப்பில், மூத்த காங்கிரஸ் தலைவரான ராஜ்யசபா எம்.பி. அபிஷேக் மனு சிங்வி; எ.வ.வேலு தரப்பில் முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி ஆகியோர் ஆஜராகினர்.
தமிழக அரசு வாதம்
இந்த விசாரணையின் தொடக்கத்தில் தமிழக அரசு சார்பில் ஆஜரான அபிஷேக் மனு சிங்வி, “சென்னை உயர்நீதிமன்றம் முறையான ஆய்வு செய்யாமல் உத்தரவிட்டுள்ளது; நடவடிக்கை எடுக்கக் கூடாது; கைது செய்யக் கூடாது; லுக் அவுட் நோட்டீஸுக்கும் தடை என உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு ஒரு வழக்கை ரத்து செய்யக் கோரும் மனுவில் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அதாவது வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரும் மனுவில், கைது நடவடிக்கைக்கு முழுமையான தடையை (blanket embargo) வழங்கக்கூடாது.
குற்றவியல் நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரும் மனுக்களை முன்ஜாமீனுக்கு மாற்றாகப் பயன்படுத்தக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகளில் கூறப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் ‘லுக்-அவுட்’ சுற்றறிக்கையையும் (Look Out Circular) நிறுத்தி வைத்தால், கைது நடவடிக்கையும் இருக்காது, லுக்-அவுட் சுற்றறிக்கையும் இருக்காது. லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடப்பது தெரிந்த உடனேயே எ.வ.வேலு சிங்கப்பூருக்குச் சென்றுவிட்டார்.
ஆகையால், லுக் அவுட் நோட்டீஸ் மீதான சென்னை உயர்நீதிமன்றத்தின் தடையை உடனே நீக்க வேண்டும். ஏனெனில் இன்று விசாரணைக்கு ஆஜரான எ.வ.வேலு நாளையே கூட, வெளிநாடு போய்விடுவார். இதனை சீரியசான விஷயமாக பார்க்க வேண்டும்” என வாதிட்டார்.
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் சரமாரி கேள்விகள்
எ.வ.வேலு தரப்பில் வாதங்களை முன்வைக்க முகுல் ரோத்தகி எழுந்த போது, நீதிபதிகள் இருவருமே சட்டென குறுக்கிட்டு, ”நீங்கள் உட்காருங்கள்.. நீங்க ஏன் டென்ஷன் ஆகுறீங்க? நாங்க பார்த்து கொள்கிறோம்” என்றனர்.
அதாவது மேல்முறையீட்டு மனு விவரங்களை முழுமையாக நீதிபதிகள் படித்ததால், எ.வ.வேலு தரப்பு வாதங்களை முன்வைக்கும் முன்னரே தமிழக அரசின் வாதங்கள் மீது நீதிபதிகள் இருவருமே சரமாரியாக கேள்விகளை அடுக்கினர்.
இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் நடந்த காரசார விவாதம்:
நீதிபதிகள் விக்ரம்நாத் மற்றும் சந்தீப் மேத்தா: சிகிச்சைக்கு வெளிநாட்டுக்குப் போவதாக சொல்லிவிட்டுதான் எ.வ.வேலு போயிருக்கிறார்.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில்தான் இன்று விசாரணைக்கும் எ.வ.வேலு ஆஜராகி இருக்கிறார்.
- அப்படி விசாரணைக்கு ஆஜராகிவிட்ட எ.வ.வேலுவிடம் விசாரணை நடத்துவதில் என்ன தயக்கம்?
- விசாரணைக்காக நேரில் ஆஜராகும் நபரை ஏன் ’தேடப்படும் குற்றவாளி’ என அறிவிக்கும் லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்க வேண்டும்?
- லுக் அவுட் நோட்டீஸ் தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என தமிழக அரசு நினைப்பது ஏன்?
- தமிழக அரசின் இந்த அப்பீல் மனு டிஸ்மிஸ் செய்ய வேண்டிய ஒன்றுதான்.
- எ.வ.வேலுவிடம் விசாரணை நடத்த யாருமே தடை விதிக்கவில்லை; தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை அவரிடம் விசாரணை நடத்த வேண்டியதுதானே? கேள்விகளை கேட்க வேண்டியதுதானே?
அபிஷே மனு சிங்வி: அப்படியானால், லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு எ.வ.வேலு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்கிற உத்தரவையாவது நீதிபதிகள் பிறப்பிக்க வேண்டும்.
நீதிபதிகள் (சற்று குரலை உயர்த்தி): ஏன் அப்படி ஒரு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்? நீங்கள் மனுத் தாக்கல் செய்திருப்பது லுக் அவுட் நோட்டீஸ் தொடர்பானது மட்டும்தானே…
விசாரணைக்கு ஆஜரான ஒருவருக்கு “விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்” என நாங்கள் ஏன் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்?
அபிஷேக் மனு சிங்வி: எ.வ.வேலு மீது மிக கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது.. இந்த மனுவை படித்துப் பாருங்கள்..
நீதிபதிகள் (சற்று கடுமையாக): நாங்க ஏன் படித்துப் பார்க்க வேண்டும்? நீங்கள் மேல்முறையீடு செய்திருப்பது லுக் அவுட் நோட்டீஸ் குறித்து மட்டும்தான். எ.வ.வேலு முறைகேடு செய்தாரா? இல்லையா? என்பது எல்லாம் வேறு விஷயம். இரண்டையும் போட்டு குழப்ப வேண்டாம்.
அபிஷேக் மனு சிங்வி: அப்படியானால், எ.வ.வேலுவின் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவையாவது பிறப்பிக்க வேண்டும்.
நீதிபதிகள் (மீண்டும் கோபமாக): எதற்காக எ.வ.வேலு பாஸ்போர்ட்டை ஒப்படைக்க நாங்கள் ஏன் உத்தரவு போட வேண்டும்? அப்படி அவர் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என தமிழக அரசு விரும்பினால் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனியே ஒரு மனுத் தாக்கல் செய்து உத்தரவை பெற்றுக் கொள்ளுங்கள்.
சிங்கப்பூர் சென்றவர் திரும்பவும் வந்துவிட்டார்; அப்படி திரும்ப வந்தவரிடம் இப்படியான விஷயங்கள் ஏன் கேட்கப்படுகின்றன? என்பதுதான் எங்களுக்குப் புரியவில்லை.
இதனால் தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை டிஸ்மிஸ் செய்கிறோம்.
முகுல் ரோத்தகி: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது; இப்போது இது ஆரம்பம்தான். ஆட்சி மாறிய அடுத்த நிமிடம் முதல் எஃப்ஐஆர்கள் (FIRs) பதியப்படுகின்றன. இன்னும் பல வழக்குகள் வரும். எ.வ.வேலு, முந்தைய ஆட்சியில் அமைச்சராக இருந்தவர்; பழிவாங்கும் நோக்கத்துடன் இதனை செய்கின்றனர். இந்த விளையாட்டு எல்லாம் எங்களுக்கும் தெரியும்; நாங்களும் தயாராகவே இருக்கிறோம்.
அப்போது சிரித்தபடியே குறுக்கிட்ட நீதிபதி சந்தீப் மேத்தா, “ஏன் இவ்வளவு பீல் செய்கிறீர்கள்? உங்க ஆட்சி காலத்திலும் இதையேதான் செய்து கொண்டிருந்தீர்கள்.. இப்போது உங்களுக்கு அதுவே திரும்பி வந்துள்ளது..
உங்களுக்காக நான் இலவசமாக ஆலோசனை சொல்கிறேன்.. விசாரணைக்கு அழைக்கிறார்களா? நீங்க தவறு செய்யவில்லை என்கிற போது ஆஜராகுங்கள்.. உங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைக்கலாமே..
உங்கள் தரப்பை கைது செய்ய வேண்டும் என நினைக்கிறார்களா? ஜாமீனுக்கு முறையீடு செய்யுங்கள்.. இதை செய்யாமல் புலம்ப வேண்டாம்.. ஒரு அரசியல்வாதி எனில் இதை எல்லாம் எதிர்கொண்டுதானே ஆகவேண்டும். நீங்க விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு கொடுங்கள்..
அவர்கள் இதைத் தொடர்ந்து செய்து கொண்டே இருப்பார்கள். நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள். இது உங்களுக்கு நல்லதுதான். நீங்கள் அதற்கு நன்றி சொல்ல வேண்டும்” என மேலோட்டமாக குறிப்பிட்டார்.
இதன் பின்னர் மீண்டும் அபிஷேக் மனு சிங்வி குறுக்கீடு செய்ய எழுந்த போது, “எல்லாவற்றையும் கேட்டுவிட்டோம்; வழக்கை முடித்துவிட்டோம்” என நீதிபதிகள் விக்ரம்நாத் மற்றும் சந்தீப் மேத்தா இவருமே கடுமையாக தெரிவித்தனர். இதனையடுத்து வழக்கு விசாரணை முடிவடைந்தது.
