தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யாவிட்டால், அவரது ஜாமீன் ரத்து செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 23) எச்சரித்துள்ளது. senthil balaji bail case
அமைச்சர் பதவியா, ஜாமீனா இரண்டில் ஒன்றை தேர்வு செய்யுமாறு நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. இதற்காக வரும் திங்கள் கிழமை வரை அவருக்கு அவகாசம் அளித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் ஏஜி மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி அபய் ஓகா, ‘நீங்கள் பதவி (அமைச்சர்) அல்லது ஜாமீன் இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் எதைத் தேர்வு செய்ய விரும்புகிறீர்கள்?” என செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் முகுல் ரோஹத்கியிடம் கேட்டார்.
மேலும், “செந்தில்பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீன் தகுதியின் அடிப்படையில் அல்ல. பிரிவு 21 ஐ மீறியதன் அடிப்படையில்தான் வழங்கப்பட்டது. விசாரணையில் ஏற்பட்ட தாமதம் மற்றும் நீண்ட சிறைவாசம் ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே ஜாமீன் வழங்கப்பட்டது” என்றும் தெரிவித்தார்.
செந்தில் பாலாஜி தரப்பில், “செந்தில் பாஜியின் அமைச்சர் பதவியின் செல்வாக்கு குறித்த அச்சம் இருந்தால் விசாரணையை தமிழ்நாட்டில் இருந்து வேறு மாநிலத்துக்கு மாற்றலாம்” என்று கோரிக்கை வைக்கப்ப்பட்டது. ஆனால்,”அது சரியாக இருக்காது. இவ்வழக்கில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாட்சிகள் உள்ளனர்” என்று நீதிபதி ஓகா கூறினார்.
செந்தில்பாலாஜி தரப்பில் பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்று கோரியபோது, நீதிபதிகள் அவகாசம் அளிக்க மறுத்துவிட்டனர். வரும் திங்கள் கிழமைக்குள் ஜாமீனா, அமைச்சர் பதவியா என்பதை செந்தில்பாலாஜி தெரிவிக்க வேண்டும்” என உத்தரவிட்டனர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.