தொலைபேசி சேவைகள் வழங்குவதில் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்-ஐ முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் பின்னுக்குத் தள்ளியது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி தொடங்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டு அனைத்து மக்களுக்கும் தனது நெட்வொர்க் சேவையை வழங்கியது.
தற்போது ஜியோ சந்தாதாரர்கள் அதிகரிப்பால் இந்தியாவின் மிகப் பெரிய நெட்வொர்க் மற்றும் உலகின் மூன்றாவது பெரிய மொபைல் நெட்வொர்க்காக உள்ளது.
இது குறித்து இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் நேற்று (அக்டோபர் 18) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”2016-ல் அறிமுகமான ரிலையன்ஸ் – ஜியோ நிறுவனம் 7.35 மில்லியன் சேவைகளை வழங்கி, 22 ஆண்டுகளாக மக்களுக்கு சேவை வழங்கி வரும் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்-ஐ பின்னுக்குத் தள்ளியது.
பி.எஸ்.என்.எல் நிறுவனம் 7.13 மில்லியன் தொலைபேசி சேவைகளை வழங்கியுள்ளது.
இந்தியாவில் நெட்வொர்க் சேவையில் முதலிடத்தைப் பிடித்த முதல் தனியார் நிறுவனம் என்ற பெயரை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பெற்றுள்ளது.
அரசு நிறுவனங்களான பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்களை விடத் தனியார் நெட்வொர்க் நிறுவனங்கள் வளர்ச்சியை அடைந்து வருகிறது.
ரிலையன்ஸ் ஜியோ ஒருபுறம் இருக்க மற்ற நெட்வொர்க் நிறுவனங்கள் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சந்தாதாரர்கள் எண்ணிக்கையைக் கூட்டியுள்ளது.
அதே சமயம், பி.எஸ்.என்.எல் 15,734 சந்தாதாரர்கள் மற்றும் எம்.டி.என்.எல் 13,395 சந்தாதாரர்களை இழந்துள்ளன” என்று இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி ஜியோ தனது 5ஜி சேவையை அறிமுகப்படுத்தியது. மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் ஜியோ நிறுவனம் 5ஜி சேவையை வழங்கும் என்று ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
பரந்தூரைபரந்தூரை தேர்வு செய்தது ஏன்? சட்டமன்றத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்!
