கேரளாவில் நடைப்பயணம் மேற்கொண்டிருக்கும் ராகுல் காந்தி, அங்கு படகுப் போட்டியில் கலந்துகொண்டது பார்வையாளர்களை மகிழச் செய்தது.
காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவும், கட்சியினரிடையே எழுச்சியை ஏற்படுத்தும் வகையிலும் ’பாரத் ஜோடோ யாத்ரா’ எனும்,
இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரி காந்தி மண்டபம் அருகே அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்கினார்.
மொத்தம் 150 நாட்கள் நடைப்பயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி, 12 மாநிலங்கள், இரு யூனியன் பிரதேசங்கள் வழியாக 3,500 கி.மீ. தொலைவு பயணித்து காஷ்மீரில் நடைப்பயணத்தை நிறைவு செய்கிறார்.
அவருடன் காஷ்மீர் வரை 118 பேர் செல்கின்றனர்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைப்பயணம் துவங்கிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கடந்த செப்டம்பர் 10ம் தேதி தமிழகத்தை நிறைவு செய்தார்.
பின்னர், செப்டம்பர் 11ம் தேதி முதல் கேரளாவில் நடைப்பயணத்தை தொடர்ந்தார். நடைப்பயணத்தின் 9ம் நாளான செப்டம்பர் 15ம் தேதி ஓய்வுநாளாக அறிவிக்கப்பட்டது.
மீண்டும் செப்டம்பர் 16ம் தேதி காலை கொல்லம் மாவட்டத்திலிருந்து நடைப்பயணத்தைத் தொடங்கினார், ராகுல்.
அதைத் தொடர்ந்து அவர் திருவனந்தபுரம் நோக்கி நடைப்பயணம் சென்றார். இந்த நிலையில் நேற்று (செப்டம்பர் 19) அவர் கேரளாவில் ஒரு காட்சி படகு போட்டியில் பங்கேற்றார்.
கேரளாவின் புன்னமடா ஏரியில் காட்சி பாம்பு படகு போட்டி ஒன்று நடத்தப்பட்டது. அதில் ராகுல் காந்தி மற்றும் முக்கிய நிர்வாகிகள் சிலரும் பங்கேற்றனர். இந்தப் போட்டியில் ராகுல் காந்தியும் தன் பங்கிற்கு படகை இயக்கி மகிழ்ந்தார். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
படகுப் போட்டியில் கலந்துகொண்டது குறித்து ராகுல் காந்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ”நாம் அனைவரும் ஒன்றிணைந்து சரியான நோக்கத்துடன் செயல்பட்டால், நம்மால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை” என அதில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள செர்தலா தாலுக்காவில் இருந்து தனது நடைபயணத்தை துவங்கியுள்ளார் ராகுல் காந்தி.
ஜெ.பிரகாஷ்
