ஸ்விகி ஊழியர்கள் வேலை நிறுத்தம்: காரணம் என்ன?

Published On:

| By Minnambalam

நாடு முழுவதும் உணவு டெலிவரி செய்து வந்த ஸ்விகி ஊழியர்கள் நேற்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தம் தொடரும் என்றும் இதற்கான காரணம் குறித்து விளக்கியுள்ளனர்.

உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகியில் பணிபுரிபவர்களுக்கு வாரம் ஒருமுறை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

தற்போது ஸ்விகியின் புதிய நடைமுறையில் இதுபோன்ற ஊக்கத் தொகைகள் முழுவதுமாக தவிர்க்கப்படுவதாகவும், வேலை பார்க்கும் நேரம் 16 மணி நேரம் வரை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், நேற்று சென்னையில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து பேசியுள்ள ஸ்விகி ஊழியர்கள், “ஏற்கனவே இருந்த வேலை நேரப்படி 12 மணி நேரம் வேலை பார்த்தால் வாரம் ரூ.14,500 வரை கிடைக்கும்.

ஆனால், தற்போது 16 மணி நேரம் பார்த்தால் கூட 12,000  ரூபாயைக் கூட பெற முடியாது.

எங்களுக்கான பெட்ரோல் செலவு, உணவு செலவு, வாகன செலவு போக வாரம் 7,000 ரூபாய் மட்டுமே எங்களுக்குக் கிடைக்கும்.

புதிய விதிகளின்படி எவ்வளவு வேலை பார்த்தாலும் குறிப்பிட்ட அளவு மட்டுமே சம்பளம் வழங்கப்பட உள்ளதால், மேலும் பழைய நடைமுறையின்படி ஊக்கத்தொகை மற்றும் சம்பளத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம்” என்று கூறியுள்ளனர்.

மேலும், சென்னையில் ஸ்விகி உணவு விநியோகம் செய்யும் பகுதிகள் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட மண்டலங்களில் இந்த புதிய நடைமுறை அமலுக்கு கொண்டு வந்ததாகவும் தெரிவித்த அவர்கள், மீதமுள்ள மண்டலங்களிலும் புதிய சம்பள நடைமுறையை கொண்டு வருவார்கள் எனவும் தெரிவித்தனர்.

தற்போது நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய விதிமுறைகளின்படி தங்களுக்கு பணிச்சுமை அதிகரிப்பதாகவும் வருமானம் குறைவதாகவும் வருத்தம் தெரிவித்தனர்.

முன்பு வழங்கப்பட்டது போலவே வார ஊக்கத் தொகையை வழங்கும் வரை தாங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

-ராஜ்

டீசலுக்கு பதிலாக ஹைட்ரஜன் எரிபொருளில் ரயில் இயக்கம்ஒன்றிய அரசின் திட்டம்!

இறுதி ஊர்வலத்தில் ராணியின் உடல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share