இறுதி ஊர்வலத்தில் ராணியின் உடல்!

Published On:

| By Jegadeesh

மறைந்த பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி ஊர்வலம் தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது. ராணியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக லண்டன் நகரில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் குவிந்துள்ளனர்.

ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் இருந்து வெஸ்ட்மின்ஸ்டர் அபேக்கு கொண்டு செல்லப்படுகிறது. பின்பு அங்கு இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

இந்த இறுதி ஊர்வலத்தில் ராணி இரண்டாம் எலிசபெத்தின் குடும்ப உறுப்பினர்கள் அவரது சவப்பெட்டியை பின் தொடர்ந்து வருகின்றனர்.

பின்னர், ராணியின் உடல் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் இருந்து விண்ஸ்ட்ஸருக்கு எடுத்து செல்லப்பட்டு , அவர் கணவர் பிலிப் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் அருகே அடக்கம் செய்யப்பட இருக்கிறது.

ADVERTISEMENT

ராணி எலிசபெத்தின் சவப்பெட்டிக்கு மேல் அவரது செங்கோல் மற்றும் வைர கிரீடம் வைக்கப்பட்டுள்ளது.

இந்த இறுதி சடங்கில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துவதற்காக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உலகத்தலைவர்கள் லண்டன் வந்துள்ளனர்.

ADVERTISEMENT

இவரது உடல் அடக்கம் செய்யப்படும் இடத்தில் எந்த ஒரு சத்தமும் இல்லாத வகையில் இருப்பதற்காக ஹீத்ரோ விமானநிலையத்தில் இருந்து புறப்படும் மற்றும் வருகை தரும் 100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ராணியின் இறுதிச் சடங்கில், பெல்ஜியத்தின் மன்னர் பிலிப் மற்றும் ராணி மாடில்டே; நெதர்லாந்தின் மன்னர் வில்லெம்-அலெக்சாண்டர் மற்றும் அவரது மனைவி ராணி மாக்சிமா, அவரது தாயார், முன்னாள் டச்சு ராணி இளவரசி பீட்ரிக்ஸ்; மற்றும் ஸ்பெயினின் மன்னர் பெலிப் மற்றும் ராணி லெடிசியா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

ஜப்பான் பேரரசர் நருஹிட்டோ மற்றும் ஜப்பானின் பேரரசி மசாகோ ஆகியோரும் இந்த இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டுள்ளனர், அதே போல் பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக், புருனேயின் சுல்தான், ஹசனல் போல்கியா ஆகியோர் ஜோர்டான் மன்னர் அப்துல்லா; குவைத்தின் பட்டத்து இளவரசர், ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-சபா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

நள்ளிரவில் மகராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ள நிலையில் , தற்போது லண்டனில் அதிக குளிர் நிலவி வருவதால் மக்கள் முன்னேற்பாடாக படுக்கைகள் மற்றும் கூடாரங்களை கொண்டு செல்வதை காண முடிகிறது.

பொதுமக்கள் ராணியின் உடல் கொண்டு செல்லப்படும் தெருக்களில் நீண்ட நேரம் காத்திருப்பதால் உணவு மற்றும் பானங்களையும் எடுத்துச் செல்கின்றனர்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

நள்ளிரவில் நல்லடக்கம் செய்யப்படும் ராணியின் உடல்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share