வினாத்தாள்களை லீக் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கிடும் வகையில், ‘வினாத்தாள் கசிவு தடுப்புச் சட்டத் திருத்த மசோதா’ கொண்டு வர மத்திய அமைச்சரவை இன்று (ஜூலை 24) ஒப்புதல் வழங்கியுள்ளது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்தும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரியும் டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இன்று (ஜூலை 24) பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இதில் வினாத்தாள் கசிவு தடுப்புச் சட்ட திருத்த மசோதா கொண்டு வரவும், அதன்படி தவறு செய்பவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரன் ரிஜுஜு கூறுகையில், ”இந்த மசோதாவை கொண்டு வருவதில் எந்த தாமதமும் இருக்கக் கூடாது என்று பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி மசோதாவை தாக்கல் செய்ய தயாராகி வருகிறோம். பிரதமரின் இந்தக் கருத்தையே நாட்டின் மக்களும் விரும்புகிறார்கள், எனவே இதைத் தடுப்பதற்கான எந்த தந்திரங்களிலும் ஈடுபடுவது சரியாக இருக்காது. நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்து இடையூறு விளைவித்தால் காங்கிரஸ் இதில் சிக்கிக்கொள்ளும்” என்று கூறியுள்ளார்.
மேலும் வழக்கு விசாரணைகள் பல ஆண்டுகள் இழுத்தடிக்கப்படாமல், விரைவாக விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று, இந்த வரைவு மசோதாவை ஜூலை 27ஆம் தேதியே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வருகின்றன.
