‘வேந்தராக’ ஆளுநர்: பூஞ்ச்சி ஆணையம் கூறியது என்ன?

Published On:

| By Minnambalam Desk

ரவிக்குமார் எம்.பி Punchhi Commission recommendations

தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு ஏப்ரல் 25, 26 தேதிகளில் நடைபெறுமென அறிவித்துள்ள ஆளுநர் அலுவலகம் “தமிழ்நாடு மாநிலப் பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநர் மாநாட்டிற்குத் தலைமை தாங்குவார்” எனக் கூறியுள்ளது. Punchhi Commission recommendations

தமிழ்நாடு ஆளுநர் சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்பட்டுள்ளார் என உச்சநீதிமன்றம் சுட்டிக் காட்டிய பிறகும்கூட திரு ஆர்.என்.ரவி அவர்கள் சட்டத்தை மதிப்பதற்குத் தான் தயாராக இல்லை என்பதை வெளிப்படுத்தி வருகிறார்.

மாநிலப் பல்கலைக்கழகங்களுடைய வேந்தராக அவர் தொடர்வதாகவும் அந்த அதிகாரத்தின் அடிப்படையில் துணைவேந்தர்கள் மாநாட்டைக் கூட்டியிருப்பதாகவும் ஆளுநர் மாளிகையின் செய்திக் குறிப்பு கூறுவது திரு ஆர்.என்.ரவி அவர்களின் சட்டத்தை மதிக்காத போக்குக்கு ஒரு சான்று ஆகும்.

பல்கலைக் கழகங்களின் வேந்தர் பொறுப்பிலிருந்து ஆளுநரை விடுவித்துத் தமிழ்நாடு அரசு இயற்றிய சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆண்டுக் கணக்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டிருந்தார்.

அது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில்தான் உச்ச நீதிமன்றம் அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 142 வழங்கியுள்ள தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த 10 மசோதாக்களும் சட்டம் ஆகிவிட்டதாக அறிவித்தது. அந்தப் பத்து சட்ட மசோதாக்களிலும் ‘வேந்தர்’ என்ற சொல்லுக்குப் பதிலாக ‘அரசாங்கம்’ என்ற சொல் இடம்பெறும் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

பத்து பல்கலைக்கழகங்கள் அல்லாத மற்ற பல்கலைக்கழகங்களுடைய சட்டங்களில் அத்தகைய திருத்தம் செய்யப்படாத நிலையில் எஞ்சியுள்ள மாநிலப் பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் நீடிப்பதாகவே கருத வேண்டியுள்ளது. எனினும் உச்சநீதிமன்றம் கடுமையாகக் கண்டித்த பிறகும் ஆளுநர் பதவியில் தொடர்வதும், துணைவேந்தர் மாநாட்டை நடத்துவதும் தார்மீக ரீதியில் சரிதானா? என்பதை திரு ஆர். என்.ரவி அவர்கள் சிந்திக்க வேண்டும். இதை சட்டப்படி எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம் என்பதைத் தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

ஒரு மாநிலத்தின் ஆளுநர் அந்த மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் வேந்தராக செயல்படுவதற்கு அரசமைப்புச் சட்டத்தில் எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. ஆளுநரின் அதிகாரத்தையும், கடமையையும் வரையறுத்திருக்கிற அரசமைப்புச் சட்ட உறுப்புகளில் பல்கலைக்கழக வேந்தராக அவர் இருப்பதைப் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை. மாநிலப் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற பொறுப்பு மாநில அரசு இயற்றுகிற பல்கலைக்கழகங்களுக்கான சட்டங்களின் மூலம் தான் ஆளுநருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. Punchhi Commission recommendations

பூஞ்ச்சி ஆணையத்தின் பரிந்துரை! Punchhi Commission recommendations

2007 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசினால் அமைக்கப்பட்ட நீதிபதி பூஞ்ச்சி தலைமையிலான ஆணையம் ஆளுநர்களை வேந்தர்களாக நியமிப்பதில் உள்ள சிக்கலைப் பற்றி விரிவாக ஆராய்ந்திருக்கிறது. Punchhi Commission recommendations

“ஒரு மாநிலத்தில் கல்வி நிர்வாகத்தில் ஆளுநருக்கு ஏதேனும் பங்கு இருக்க வேண்டுமா என்பது ஆளுநரைப் பொறுத்தவரை எழும் ஒரு முக்கியமான கேள்வி. மாநிலப் பல்கலைக் கழகங்களில் ஆளுநர்கள் வழக்கமாக வேந்தர்களாக நியமிக்கப்படுவதால் இந்தக் கேள்வி எழுகிறது. “ எனத் தெரிவித்துள்ள பூஞ்ச்சி ஆணையம், “ மாநில பல்கலைக்கழகச் சட்டங்கள் பொதுவாக ஆளுநர் தனது பதவியின் காரணமாக, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தராகவோ அல்லது தலைவராகவோ இருப்பார் என்றும், துணைவேந்தர் நியமனம் போன்ற பல்வேறு அதிகாரங்களைக் கொண்டிருப்பார் என்றும் கூறுகின்றன.

ஒரு பல்கலைக்கழகத்தின் வேந்தராக ஆளுநரின் செயல்பாடுகள் அரசமைப்புச் சட்ட உறுப்பு 163(1) இன் வரம்பிற்குள் வருகிறதா என்பதுதான் கேள்வி” என்று குறிப்பிட்ட பூஞ்ச்சி ஆணையம், ஆளுநர்கள் மாநிலப் பல்கலைக்கழகங்களில் வேந்தராக நியமிக்கப்படும் போது அவர் அமைச்சரவையின் ஆலோசனைகளின் படி செயல்படத் தேவையில்லை’ என்று இரண்டு நீதிமன்றத் தீர்ப்புகள் தெரிவிக்கின்றன எனக் குறிப்பிட்டு அந்த வழக்குகளின் விவரங்களையும் கொடுத்துள்ளது. Punchhi Commission recommendations

“பூரி நாத் எதிர் ஜம்மு காஷ்மீர் மாநிலம் வழக்கில், ஆளுநரை வைஷ்ணவ தேவி ஆலயத்திற்கான மேலாண்மை வாரியத்தின் தலைவராகக் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. இந்தச் சட்டம் ஆளுநருக்கு அவரது பதவியின் அடிப்படையில் அந்த அதிகாரத்தை வழங்கியுள்ளதென்றும், அவர் அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் செயல்படக்கூடாது என்றும் நீதிமன்றம் கூறியது. Punchhi Commission recommendations

ஹர்த்வாரி லால் எதிர் ஜி.டி. தபசே வழக்கிலும், ஆளுநர் ஒரு பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டால், மாநில அரசு ஆளுநருக்கு ஆலோசனை வழங்க முடியாதென்றும், ஆளுநர் முற்றிலும் தனது விருப்பப்படி செயல்பட வேண்டுமென்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.” என பூஞ்ச்சி ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

அரசமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள அவரது கடமைகளில் ஒன்றாகப் பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பு இல்லை என்பதால் இத்தகைய தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது’ என்பது பூஞ்ச்சி ஆணையத்தின் கருத்தாகும்.

“மாநில சட்டமன்றங்களால் இயற்றப்பட்ட சட்டங்களே ஆளுநருக்கு அந்த அதிகாரங்களை வழங்குகின்றன. அது தவிர்க்கப்பட வேண்டும்” என பூஞ்ச்சி ஆணையம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. Punchhi Commission recommendations

“ஆளுநரைப் பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆக்குவதும், அதன் மூலம் வரலாற்று ரீதியாகச் சில பொருத்தப்பாடுகளைக் கொண்ட அதிகாரங்களை அவருக்கு வழங்குவதும் காலங்கள் மற்றும் சூழ்நிலைகளின் மாற்றத்தால் இப்போது தேவையற்றவை ஆகிவிட்டன.

பல்கலைக்கழகக் கல்வியை ஒழுங்குபடுத்துவதில் அமைச்சர்கள்தான் இயல்பாக ஆர்வம் காட்டுவார்கள். ஆளுநரை வேந்தராக நியமித்து பல்கலைக் கழக நிர்வாகச் செயல்பாடுகளில் அதிகார மோதல் ஏற்படும் சூழ்நிலையை உருவாக்க வேண்டிய அவசியமில்லை” எனத் தெரிவித்துள்ள பூஞ்ச்சி ஆணையம், “ எந்தவொரு சட்டத்தின் கீழும் ஆளுநருக்கு சர்வ சாதாரணமாகப் பணிகளை ஒதுக்குவது கூடாது . ஆளுநரின் பங்கு அரசமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்ட விதிகளுக்குள் மட்டுமே இருக்க வேண்டும்” என்று பரிந்துரை செய்துள்ளது.

பூஞ்ச்சி ஆணையத்தின் 7 தொகுதிகள் கொண்ட அறிக்கை 2010 ஆம் ஆண்டே ஒன்றிய அரசிடம் வழங்கப்பட்டுவிட்டது. ஆனாலும் அந்தப் பரிந்துரைகளை ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்தவில்லை. அது தொடர்பாக நாடாளுமன்றத்தில் 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் கேள்வி எழுப்பப்பட்டபோது அதற்கு பதிலளித்த ஒன்றிய அமைச்சர் நித்தியானந்த் ராய் “ பூஞ்ச்சி ஆணையத்தின் அறிக்கை அனைத்து மாநில அரசுகள்/யூனியன் பிரதேசங்கள் மற்றும் ஒன்றிய அரசின் அமைச்சகங்கள்/துறைகளுக்கு அவர்களின் கருத்துகளை வழங்குமாறு கேட்டு அனுப்பப்பட்டது.

மாநில அரசுகள்/யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்கள்/துறைகளிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளுடன் கூடிய அறிக்கை, 16.07.2016 அன்று நடைபெற்ற 11வது இன்டர்-ஸ்டேட் கவுன்சில் (ISC) கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆணையத்தின் பரிந்துரைகளை முதலில் இன்டர்-ஸ்டேட் கவுன்சிலின் நிலைக்குழு ஆய்வு செய்யலாம் என்று இன்டர்-ஸ்டேட் கவுன்சில் முடிவு செய்தது. அதன்படி, பூஞ்ச்சி ஆணையத்தின் பரிந்துரைகளை இன்டர்-ஸ்டேட் கவுன்சிலின் நிலைக்குழு ஆய்வு செய்தது. நிலைக்குழுவின் பரிந்துரைகள் மீண்டும் அனைத்து மாநில அரசுகள்/யூனியன் பிரதேசங்களுடனும் பகிர்ந்து கொள்ளப்பட்டு, அவர்களின் கருத்துகள் கோரப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.

பூஞ்ச்சி ஆணையம் அளித்த 273 பரிந்துரைகளில் பல பரிந்துரைகள் மாநில அரசுகளுக்குக் கூடுதல் அதிகாரம் அளிப்பவையாக இருந்தும்கூட அந்தப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு பெரும்பாலான எதிர்க்கட்சிகள் வலியுறுத்தவில்லை. திமுக மட்டுமே தனது ஆட்சிக் காலங்களில் சில முயற்சிகளை மேற்கொண்டது.

ஆளுநருக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பைப் பார்த்த பிறகு, எந்தவொரு மாநில அரசும் தனது பல்கலைக் கழகத்துக்கு ஆளுநரை வேந்தராக நியமிக்கும் தவறைச் செய்யாது என நம்பலாம்.

ஆளுநர் ஆர்.என்.ரவியிடமிருந்து தமிழ்நாட்டின் உயர்கல்வியைக் காப்பாற்ற வேண்டுமென்றால் பத்து பல்கலைக் கழகங்களின் வேந்தர் பொறுப்பிலிருந்து ஆளுநரை விடுவித்து சட்டத் திருத்தம் செய்ததுபோலவே எஞ்சியுள்ள மாநிலப் பல்கலைக் கழகச் சட்டங்களிலும் தமிழ்நாடு அரசு திருத்தம் கொண்டுவர வேண்டும். அதை இந்த சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே தமிழ்நாடு அரசு செய்வது நல்லது.

கட்டுரையாளர் குறிப்பு:

Punchhi Commission recommendations on Governor Ravikumar MP

முனைவர் டி.ரவிக்குமார், நாடாளுமன்ற உறுப்பினர்  (விழுப்புரம் மக்களவைத் தொகுதி), எழுத்தாளர்-மொழிபெயர்ப்பாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share